மதுரை: தென்மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மதிப்பளித்து தென்னக ரயில்வே நிர்வாகம், வைகை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலை கூடுதல் இருக்கை வசதிகளுடன் எல்எச்பி தொழில்நுட்பத்துடன் முழுவதும் மாற்றியமைத்துள்ளது பயணிகளிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வைகை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலானது, 40 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் இருப்புப் பாதையில் தன்னுடைய பயணத்தை தொடங்கியபோதே சுமார் 105 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு சாதனை படைத்த வரலாறும் கொண்டது குறிப்பிடத்தக்கது.
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் மற்றொரு சிறப்பம்சமாக, சென்னை ஐ.சி.எஃப் (Integral Coach Factory-ICF) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி முதன் முதலில் நம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இணைக்கப்பட்டது. மேலும், தெற்கு ரயில்வேயில் நவீன ஜன்னல், கண்ணாடி ஜன்னல், டியூப் லைட் போன்றவை முதன் முதலாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஒன்னே ஒன்னு தான்
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு செல்வதாக இருந்தால் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலையே பெரும்பாலும் நம்பியிருந்தனர். இதை விட்டால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யவேண்டிய நிலை இருந்து. இதைத் தவிர கொல்லம்-சென்னை இடையில் இயக்கப்பட்டு வந்த கொல்லம் மெயில் ரயிலும் பாஸஞ்சர் ரயிலாக இருந்ததால் பெரும்பாலான பயணிகள் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வந்தனர்.
பயணிகள் கோரிக்கை
மதுரையில் இருந்து சென்னைக்கும் அங்கிருந்து மதுரைக்கும் பகல் நேரத்தில் ரயில் விடப்பட்டால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பயணிகள், வர்த்தக சங்கங்கள், ரயில் பயணிகள் நலச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் என அப்போது இருந்த அனைத்து அமைப்புகளும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
முதல் அதிவிரைவு ரயில்
மதுரை மற்றும் அதன் தென் மாவட்ட மக்களின் வெகு நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 1977ஆம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்டு 15ஆம் தேதியன்று பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கி வைக்கப்பட்டது. தனது பயணத்தை தொடங்கிய சில நாட்களிலேயே சுமார் 105 கி.மீ வேகத்தில் சென்ற அதிவிரைவு ரயில் என்று பெயரெடுத்தது. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 1500 பேர்களாவது இருக்கும்.
நீலநிறத்திற்கு மாற்றம்
கடந்த 1970ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இயக்கப்பட்டு வந்த ரயில்களின் அதிகபட்ச வேகமே 70 முதல் 75 கி.மீ வேகம்தான். நம் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வேகத்தையும் மிஞ்சிவிட்டது. இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளும் மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தன. தொடக்கத்தில் கனடா நாட்டின் தயாரிப்பான 1850 குதிரைத்திறன் கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலாகவே இருந்தது. தமிழ்நாட்டில் கடந்த 1998ஆம் ஆண்டில் மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டபோது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நிறமும் நீலநிறமாக தன்னை மாற்றிக்கொண்டது.
வேகம் மணிக்கு 105 கி.மீ
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்ட தொடக்க காலத்தில் 6 பேர் கொண்ட டிரைவர் குழுவே ஷிஃப்டு முறையில் ரயிலை இயக்கி வந்தனர். அப்போது மணிக்கு சுமார் 105 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இப்பொழுதும் அதே 105 கி.மீ வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு சாதனை தான். மதுரையிலிருந்து தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15க்கு சென்னையை அடைகிறது. அதேபோல் சென்னையில் இருந்து மதியம் 1.40க்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மதுரையை வந்தடைகிறது.
முதல் ஏசி ரயில் பெட்டி
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் மற்றொரு சிறப்பம்சமாக, சென்னை ஐ.சி.எஃப் (Integral Coach Factory-ICF) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி முதன் முதலில் நம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இணைக்கப்பட்டது. மேலும், தெற்கு ரயில்வேயில் நவீன ஜன்னல், கண்ணாடி ஜன்னல், டியூப் லைட் போன்றவை முதன் முதலாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
இடைஞ்சலான இருக்கைகள்
என்னதான், இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட ரயிலாக இருந்தாலும், பயணிகள் உட்காரும் இருக்கைகள் என்னவோ அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே அனைத்து பயணிகளும் அதிருப்தி தெரிவித்த வண்ணம் இருந்தனர். காரணம் பகல் நேர ரயிலாக இருப்பதால் யாரும் எந்த அதிருப்தியும் தெரிவிக்க மாட்டார்கள் என்றே தென்னக ரயில்வே நிர்வாகம் நினைத்துக்கொண்டிருந்தது.
வசூல் மட்டும் போதும்
குளிர்சாதன வசதிகள் உடைய ஏ.சி.சேர் கார் (A/C Chair Car) பெட்டிகள் மட்டுமே போதுமான இடவசதிகள் கொண்ட புஷ்பேக் வசதியுடன் கூடிய பெட்டிகளாக இருந்தன. மற்றபடி இரண்டாம் வகுப்பு உட்காரும் இருக்கை வசதிகள் உடைய பெட்டிகள் அனைத்துமே மோசமான நிலையிலேயே இருந்து வந்தன. வசூலை மட்டுமே நோக்கமாக கொண்டு இயக்கப்பட்டதால் மூன்றுபேர் உட்காரும் இருக்கைகள் எல்லாமே கவலைக்கிடமான நிலையிலே இருந்தன.
ஒருவர் மடியிலே ஒருவரடி
மூன்று பேர் உட்கார்ந்தாலும் இருக்கைகள் அனைத்துமே மிகக்குறுகியதாக இருந்ததால், மூன்றுபேருமே ஒருவர் மடியில் இன்னொருவர் உட்காரும் நிலையே இருந்தது. இதனால் பெரும்பாலானவர்கள், தங்கள் இருக்கைகளை தியாகம் செய்து விட்டு ஊர் சென்று சேரும் வரையிலும், பாதைகளின் ஓரத்திலும், படிக்கட்டுகளிலும் உட்கார்ந்து கொண்டு வரும் நிலையே நீடித்து வந்தது. இந்த இம்சையானது நாட்டிலுள்ள அனைத்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (Intercity Express) ரயில்களிலும் தொடரும் சோகமாகும்.
மாற்றம் முன்னேற்றம்
இந்நிலையில், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இடவசதி போதவில்லை என்று அனைத்து பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தென் மாவட்ட ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. மற்ற தென்மாவட்ட ரயில்களான பாண்டியன், பொதிகை மற்றும் நெல்லை அதிவிரைவு ரயில்களைப்போல் இதுவும் இலகுரக ரயில் வண்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயிலாக தனது ஓட்டத்தை தொடர்கிறது.
எல்எச்பி தொழில்நுட்பம்
தற்போது இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது ஜெர்மன் தொழில்நுட்பத்தில் எல்எச்பி (Linke Hofmann Busch-LHB) பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இவ்வகையான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்டிகள் மிக இலகுரகமாவும், இருக்கைகளும் கூடுதல் வசதியுடனும் உருவாக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும். இப்பெட்டிகள் ஒவ்வொன்றும் சுமார் 51.7 டன் எடை கொண்டதாகும். அதோடு எளிதில் தீப்பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
புஷ்பேக் இருக்கை வசதி
தற்போது முற்றிலும் புதிதாக அதி நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு புது மணப்பெண் போல் புதுப்பொலிவுடன் கூடிய வைகை எக்ஸ்பிரஸ், வைகை அதிவிரைவு ரயிலாக மாற்றம் கொண்டு பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுள்ள அனைத்து பெட்டிகளுமே குளிர்சாதன வசதியுடைய ஏ.சி.சேர் கார் (A/c Chair Car) இருக்கைகளைப் போலவே, இரண்டு பக்கமும் தனித்தனியாக புஷ்பேக் இருக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ரயிலா அல்லது ஃப்ளைட்டா
பயணிகள் தேவைப்படும்போது சாப்பிடுவதற்கும், படிப்பதற்கும் வசதியாக டேபிள் போன்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கும் தனித்தனியாக வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற பயணிகளுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படுத்தாமல் நம் இஷ்டத்திற்கு இருக்கையைவிட்டு வெளியேறவும் முடியும். அதேபோல், பயணிகளின் உடைமைகளை வைக்கப்படும் அலமாரிகள் அனைத்துமே விமானங்களில் உள்ளது போல் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பயனிகள் அதிக அளவில் தங்கள் உடைமைகளை வைத்துக்கொள்ளவும் முடியும். அதேபோல் வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும், ஏதோ குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிப்பதுபோல் உள்ளது என்று மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.
அழகான ஜன்னல் கதவுகள்
அதே போல் பக்கவாட்டு ஜன்னல்களும் நவீன வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய மாடல் ரயில்களில் உள்ளதுபோல் இல்லாமல், ஜன்னல் கதவுகளும் கண்ணாடி ஜன்னல்களும் பக்கவாட்டில் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பழைய மாடல் ரயில்களில் ஜன்னல் கதவுகளுடன் யுத்தம் நடத்தியது போல் புதிய எல்எச்பி மாடலில் அமைக்கப்பட்ட பெட்டிகளின் கதவுகளுடன் யுத்தம் நடத்த வேண்டியதில்லை. தொட்டவுடன் வழுக்கும் தன்மையிலேயே ஜன்னல் கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
விலையில் மாற்றம் இல்லை
புதிய எல்எச்பி தொழில்நுட்பத்தில் ரயில் பெட்டிகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளின் விலையில் மாற்றம் எதுவும் செய்யாததால், வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.