சென்னை: கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலும் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 22690 ஃபோர்டு எண்டேவர் கார்களில், முன்பக்க ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவை அனைத்தையும் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே போல் குஜராத் மாநிலத்தின் சாணாந்த் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் எண்டேவர் கார்களில் பேட்டரி கண்காணிப்பு அமைப்பிலும் தொழில்நுட்ப பிரச்சனை இருப்பதால் அவற்றையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டர் நிறுவனம், இந்திய கார் விற்பனை சந்தையிலும் கால்பதிக்க வேண்டும் என்ற நினைப்பில், அப்போது இந்தியாவில் முன்னணியில் இருந்து மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா நிறுவனத்துடன் இணைந்து 1995ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் தனது கார் உற்பத்தியை துவக்கியது.
இந்நிறுவனம் முதலில் ஃபோர்டு ஐகான் (Ford ICON) ரக கார்களையே தயாரித்து இந்திய கார் சந்தையில் விற்பனை செய்தது. பின்னர் படிப்படியாக எஸ்கார்ட் (Escort), மாண்ட்யோ (Mondeo), ஃப்யூஷன் (Fusion), எண்டேவர் (Endeavour), ஃபியஸ்டா (Fiesta), ஃபிகோ (Figo), உள்பட பல்வேறு ரக கார்களையும் தயாரித்து சந்தையில் விற்பனை செய்ததோடு வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறது.
பெரும்பாலம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே, தங்கள் தயாரிப்புகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக அவ்வகை மாடல் கார்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று மாற்றித் தருவது வழக்கம். அந்த வகையில் ஃபோர்டு நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் தயாரித்த எண்டேவர் கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளுக்காக அவற்றை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக ஃபார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் எண்டேவர் ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் எண்டேவர் செகண்ட் ஜெனரேசன் ரக கார்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இதில் குறிப்பாக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 20014ஆம் ஆண்டு வரையிலும் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 22690 எண்டேவர் மாடல் கார்களில் முன்பக்கமுள்ள ஏர்பேக் இன்ஃபிளேட்டர்களில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட கார்கள் அனைத்தையுமே திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டிலும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மாடல் கார்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து சுமார் 7249 கார்கள் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல், குஜராத் மாநிலத்தின் சாணாந்த் (Sanand) தொழிற்சாலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலும் தயாரிக்கப்பட்ட எண்டேவர் மாடல் கார்களில் பேட்டரி கண்காணிப்பு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் ஃபோர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஃபோர்டு நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.