டெல்லி : இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோகத்தால், பல சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவை வட்டமடித்து வருகின்றன. அதிலும் சீனா நிறுவனங்களுக்கு சொல்லவே வேண்டாம்.
தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் வர்த்தகபோரால் இவ்விரு நாடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவரையொருவர் மாறி மாறி வரி விதித்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அந்தந்த சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.
அதிலும் சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட பல நிறுவனங்கள் பலமாகவே பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் தற்போது சீனாவைத் தவிர வேறு நாடுகளில் காலூன்ற துடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் வலுவாக காலூன்ற திட்டம்
இந்த நிலையிலேயே ஏற்கனவே ஆன்லைன் தள்ளுபடியாலும், பற்பல தள்ளுபடிகளாலும், மக்களை கவர்ந்துள்ள சீனா ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மேலும் தனது விற்பனையை பெருக்க வலுவாக காலூன்ற நினைக்கின்றன. மேலும் அதிகளவிலான ஏற்றுமதிகள் செய்து ருசிபார்த்த இந்த நிறுவனங்கள், மேலும் வலுவாக முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. ஒரு வகையில் இந்தியா தற்போது இருக்கும் நிலையில் இது நல்ல விஷயமாகவே கருதப்படுகிறது.
இது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பா?
ஒரு புறம் இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையினை போக்க, மத்திய அரசு பற்பல வரிச் சலுகைகளை கொடுத்து வருகிறது. அதிலும் இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனங்கள் அதள பாதாளம் நோக்கி சென்று கொண்டிருந்தாலும் இந்த நிலையிலும், சீனாவின் இந்த அதிகப்படியான நுகரும் நுகர்வோர் சந்தை எப்போதும், அதிகளவில் போய்க் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாதான் முன்னிலை
இந்தியாவில் விற்பனையாகி வரும் அதிகளவிலான 5 ஸ்மார்ட்போன்களில் 4 நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சியோமி 28.3 சதவிகிதமும், விவோ 15.1 சதவிகிதமும், ஓப்போ 9.7 சதவிகிதமும் மற்றும் ரியல்மி 7.7 சதவிகிதமும் விற்பனையைக் கண்டுள்ளது. இதுவே தென் கொரியாவைச் சேர்ந்த 25.3 சதவிகிதம் பங்கினைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 இடங்களில் உற்பத்தி
ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் சியோமி, கடந்த 2015ல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தனது உற்பத்தியை ஆரம்பித்தது. ஆனால் தற்போது 7 இடங்களில் தனது உற்பத்தியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டு முதலீடு செய்வதை ஆராய்வதற்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் சுற்றுசூழல் எப்படி, உள்ளூர் கூறுகள் எப்படி என பலவற்றையும் ஆராய்ந்து வந்தது கவனிக்கத்தக்கது.
ஏற்றுமதி அதிகரிப்பு
சியோமியின் ஏற்றுமதி கடந்த ஜூன் காலாண்டில் 4.8 சதவிகிதம் அதிகரித்து, 10.4 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது நடப்பாண்டில் உள்ள பண்டிகை காலத்தை உள்ளடக்கிய மூன்றாவது காலாண்டில், இன்னும் விற்பனை அதிகரிக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் சிறந்த ஆன்லைன் விற்பனையில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் சியோமியை கேட்பதாகவும், அதிலும் ஒரு முறை, இரு முறை ஸ்மார்ட்போன் உபயோகித்தவர்கள், சியோமியின் அதிக விலை போனை வாங்க தயாராக இருக்கிறார்கள் என்றும், அந்தளவுக்கு, மக்கள் இதனை விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் இதன் சந்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும் கூறப்படுகிறது.
முதலீடுகளை அதிகரிக்கின்றன
இதே அடுத்தடுத்த இடங்களில் உள்ள விவோ தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும், இதே ஓப்போ தனது உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்கவும், அதிலும் அடுத்த 2020க்குள் 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. இதே ஒன்பிளஸ் நிறுவனமும் தனது அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்காக 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனையில் சீனாவின் ஆட்சி
90 சதவிகிதம் மொபைல் பாகங்களை விற்பனை செய்யும் சீனா, இந்தியாவில் இன்னும் வேகமாக ஊடுருவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வாழும் மக்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 400 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களாக உள்ள நிலையில் நாளுக்கு நாள், இந்த விற்பனை அதிகரிக்கும். அதிலும் சில்லறை வர்த்தகத்தை தொடங்கும் போது, அது சீனாவின் சாம்ராஜ்யமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.