டெல்லி: வேலை, வர்த்தக கூட்டம், ஆராய்ச்சி படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக, ஜப்பான் சென்ற 220 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கிழக்காசிய நாடான ஜப்பானில், 11,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 281 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகத்திடம் தங்களை தயவு செய்து இந்தியா அனுப்பி வைக்குமாறு 220 இந்தியர்கள் கடிதம் வழங்கியுள்ளனர்.
இந்திய தூதரகத்திடம் கடிதம்
மேலும் தாங்கள் தாயகம் திரும்பிய பின்னர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர். அது மட்டும் அல்ல அதிகாரிகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்து கடிதம் வழங்கியுள்ளனர்.
லாக்டவுனால் சிக்கிக் கொண்ட இந்தியர்கள்
இது குறித்து குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து, ஜப்பானின் ஹொக்கய்டோ பல்கலைக் கழகத்தில், ஆராய்ச்சி பணிக்காக வந்த ராகுல் ஜோ கூறியதாவது, என்னுடைய ஆராய்ச்சி ஒப்பந்தம் கடந்த மாதமே முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் கொரோனா லாக்டவுனால் என்னால் நாடு திரும்ப முடியாமல் ஜப்பானில் சிக்கியுள்ளேன்.
இன்சூரன்ஸூம் முடிந்து விட்டது
அதோடு தனது ஒப்பந்தம் முடிந்தபோதே, அவரின் மருத்துவ காப்பீடும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியுமா என்பது கூட தெரியவில்லை. என் மனைவிக்கு, இரண்டு நாட்கள் முன், பெண் குழந்தை பிறந்துள்ளது. என் பிள்ளையின் முகத்தை எப்போது பார்ப்பேன் என தெரியவில்லை.
அதிகரிக்கும் பிரச்சனை
ஜப்பானிலும் மற்ற நாடுகளை போல முழு அடைப்பு என்பதால், ஜப்பானே ஸ்தம்பித்து விடாது. இங்கு சட்டதிட்டங்கள், மக்களுக்கு சாதகமானவை. ஊரடங்கு விதிமீறல்களுக்காக எல்லாம் பொது மக்களை தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. இங்கு, பொது போக்குவரத்து இயங்கி கொண்டிருக்கிறது. பெரும்பாலான மாகாணங்களில், ஊரடங்கு என்பதை, கோரிக்கையாக தான் முன் வைத்துள்ளனர். அதனால், இங்கு தொற்று பரவும் ஆபத்து அதிகமாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.
எங்களை காப்பாற்றுங்கள்
நான்கு நாட்கள் அலுவலக வேலையாக வந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கிக் கொண்டுள்ள 28 வயது கர்ப்பிணிப் பெண் உட்பட, 220 இந்தியர்கள், நாடு திரும்ப முடியாமல் ஜப்பானில் தவித்து வருகின்றனர். ஜப்பானில் மட்டும் அல்ல, பல இந்தியர்கள் பலவேறு நாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.