ஒரு காலத்தில் அமெரிக்கா என்கிற பெயரைச் சொன்னாலே, தேவை இல்லாமல் மற்றவர்களை வம்பிழுக்கும் நாடு என்கிற பிம்பம் தான் பெரும்பாலானவர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும்.
அதே போல, இன்று சீனா, அந்த இடத்தைப் பிடித்து இருக்கிறது. எந்த நாட்டை எடுத்தாலும் சண்டை, எதற்கு எடுத்தாலும் பிரச்சனை.
ஹாங்காங், திபெத், சிங்ஜியாங்... பற்றி எல்லாம், யாரும் பேசக் கூடாது என்கிற ரீதியில் தன் சர்வாதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறது. சரி பஞ்சாயத்துக்கு வருவோம்.
ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம்
கடந்த ஜூன் 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனர்களின் தாக்குதலால், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள், வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால், இந்திய மக்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகிவிட்டது சீன அரசு. மக்களின் கருத்தை ஆதரிக்கும் வகையில் இந்திய (மத்திய) அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகள்
சீனாவின் முக்கியமான 59 அப்ளிகேஷன்களுக்கு ஒரு தடையைப் போட்டு, சீனாவையே அலறவிட்டது. சீனாவில் இருந்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், சோலார் மின் சாதனங்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைகள் சென்று இருக்கிறது. சீனாவின் சார்பை கணிசமாகக் குறைத்துக் கொள்ள இந்திய கம்பெனிகளும் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
275 அப்ளிகேஷன்கள்
59 சீன செயலிகளுக்கான தடையைத் தொடர்ந்து, தற்போது 275 சீன அப்ளிகேஷன்களை, மத்திய அரசு பட்டியல் போட்டு வைத்து இருக்கிறார்களாம். இதில் இந்தியர்களுக்கு மிக நெருக்கமான பலரும் விரும்பி விளையாடும் PubG கேமும் பட்டியலில் இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து சிலி (Zili), அலி எக்ஸ்பிரஸ், ரெஸ்ஸோ (Resso), யூ லைக் (U Like) போன்ற அப்ளிகேஷன்கள் பட்டியலில் இருக்கிறதாம்.
சீன முதலீடுகள்
இந்தியர்களின் பிரியமான PubG-ல் சீனாவின் டென்செண்ட் கம்பெனி முதலீடுகள் இருக்கிறதாம். சிலியில் சியாமி, அலி எக்ஸ்பிரஸில் அலிபாபா, ரெஸ்ஸோ & யூ லைக் அப்ளிகேஷன்களில் பைட் டான்ஸ் என்கிற சீன நிறுவனத்தின் முதலீடுகள் இருக்கிறதாம். இப்படி 275 சீன அப்ளிகேஷன்களை அரசு பட்டியலில் வைத்திருக்கிறார்களாம்.
என்ன செய்யப் போகிறார்கள்
இந்த 275 சீன செயலிகள், எதாவது விதி மீறல்களில் ஈடுபட்டு இருக்கிறதா என பரிசோதிப்பார்களாம். அதே போல அந்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் ப்ரைவசி விதிகளை மீறி இருக்கிறார்களா எனவும் சோதனை செய்ய இருக்கிறார்களாம். அரசு, இந்த பட்டியலில் இருக்கும் எல்லா செயலிகளை தடை செய்யலாம் அல்லது இதில் ஒரு சிலவற்றை மட்டும் தடை செய்யலாம். அல்லது எதையுமே தடை செய்யாமலும் போகலாம் என விவரம் தெரிந்த ஒருவர் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார்.
நிறைய சீன செயலிகள்
சீன அப்ளிகேஷன்கள் மற்றும் அதன் ஃபண்டிங்களை கண்டு பிடிக்க வேலை நடந்து கொண்டு இருக்கிறது என அரசு வட்டாரத்தில் சொல்லி இருக்கிறார்களாம். இந்தியர்கள் பயன்படுத்தும் சீன செயலிகள் வழியாக டேட்டா சீனாவுக்குச் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதை பரிசோதிக்கும் விதத்தில் தான் இந்த சோதனைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
சீனா டேட்டா ஷேரிங்
மேலே சொன்னது போல சீன அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் இந்தியர்களின் டேட்டா, சீனாவுக்கு பகிரப்படுகிறது என்றால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும். சீனாவில் data-sharing விதிகள் இருக்கிறதாம். அதன் படி, சீன கம்பெனிகள் உலகில் எங்கு செயல்பட்டாலும், அவர்களின் டேட்டா சீனாவுக்கு பகிரப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அதிகாரிகள்.
சீனா தரப்பு
டிக் டாக், ஷேர் இட், யூ சி பிரவுசர், பைடு, ஹலோ, வீ சாட் போன்ற 59 சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்த போதே, "இந்தியா 59 சீன செயலிகள் மீது விதித்த தடை பெரிதும் கவலை அளிக்கிறது (Strongly Concerned)" என்று சொன்னது சீன அதரப்பு. ஆக சீன அப்ளிகேஷன்களுக்கு விதித்த தடையை, சீனா பெரிய அடியாகத் தான் பார்க்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது.
பயனர்கள் எண்ணிக்கை
இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில் மட்டும் சீனாவுக்கு சுமார் 300 மில்லியன் (30 கோடி) பயனர்கள் இருக்கிறார்களாம். இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் 100 பேரில் 66 பேர் ஒரு சீன அப்ளிகேஷனையாவது டவுன் லோட் செய்து வைத்திருக்கிறார்கள் என்கிறது சந்தையில் இருந்து வரும் தரவுகள்.
சட்டம் (அ) சுற்றறிக்கை (அ) நெறிமுறைகள்
இந்தியாவில் செயல்படும் அப்ளிகேஷன்களை தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்த ஒரு முறையான சட்டம் அல்லது சுற்றறிக்கை அல்லது சரியான நெறிமுறைகளை வகுக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் அரசு சொல்லி இருக்கிறதாம். ஆக இந்தியாவில் விரைவில் அப்ளிகேஷன்களுக்கு ஒரு புதிய சட்ட திட்டம் அல்லது சுற்றறிக்கையை எதிர்பார்க்கலாம்.
59 அப்ளிகேஷன்கள்
இந்தியா தடை விதித்த 59 சீன அப்ளிகேஷன்களின் டேட்டா பயன்பாடுகளை விசாரிக்க அரசு ஒரு கமிட்டியை அமைத்து இருக்கிறதாம். இந்த கமிட்டியில் மத்திய உள் துறை, எலெக்ட்ரானிஸ், ஐடி, சட்டத் துறை என பல அமைச்சகங்களைச் சார்ந்த ஆட்களும் இருக்கிறார்களாம். அந்த கமிட்டி தான் 59 சீன அப்ளிகேஷன்களின் பதில்களை பரிசீலனை செய்வார்களாம். 59 சீன அப்ளிகேஷன்கள், தங்கள் தரப்பு பதிலைச் சொல்ல இந்த வாரம் வரை கால அவகாசம் இருக்கிறதாம்.
அடி கொஞ்சம் பலம் தான்
உலகின் ஒட்டு மொத்த டிக்டாக் பயனர்களில் 20 கோடி பேர் (ஒட்டு மொத்த உலகில் 30% பேர்) இந்தியர்கள். அதே போல பப்ஜி பயனர்களில் 17.5 கோடி பேர் (ஒட்டு மொத்த உலகில் 24% பேர்) இந்தியர்கள். இத்தனை பெரிய சந்தை பறி போகிறது என்றால் சீன கம்பெனிகளுக்கு வருத்தம் அதிகமாகத் தானே இருக்கும். இந்த 275 சீன அப்ளிகேஷன்களில் எத்தனை செயலிகளுக்கு தடை வரப் போகிறதோ அரசுக்கு தான் வெளிச்சம்.