கர்நாடகா அரசு தற்போது விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
இதற்காக இம்மாநில அரசு பெங்களூரு, பெலகாவி, மைசூரு மற்றும் சாம்ராஜ் நகர் உள்ளிட்ட நகரங்களை விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி மையங்களாக மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது.
இதன் மூலம் 6 பில்லியன் டாலர்கள் முதலீடுகளை ஈர்க்கவும், இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும் திட்டமிட்டு வருகின்றது.
பொது தனியார் கூட்டாண்மை (PPP )
இது கர்நாடகா அரசின் புதிய விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பு துறை உற்பத்தி மற்றும் தொழிற்துறை பூங்கா வரையில் அமைப்பதற்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 5 இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் விண்வெளி பாதுகாப்பு பூங்காக்கள் இருக்கும். இது முழுக்க முழுக்க தனியாரால் இயக்கப்படும், பொது தனியார் கூட்டாண்மை (PPP )மாதிரியின் கீழ் செயல்படும் எனவும், இதில் அரசாங்கம் 26% பங்கு வரை முதலீடு செய்யும் எனவும் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு துறை ஏற்றுமதி
கர்நாடக அரசின் இந்த திட்டத்தின் மூலம், பாதுகாப்பு துறை ஏற்றுமதியில் முக்கிய உற்பத்தியாளராக மாறும். ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தியில் கணிசமான பங்கினை வகிக்கும் கர்நாடகா, இதன் மூலம் இன்னும் சிறந்த உற்பத்தியாளராக மாற முடியும். இதனால் கர்நாடகாவின் உற்பத்தி வளர்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன சலுகைகள்?
கர்நாடக அரசானது உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பெரியளவிலான நிலம், நிதியுதவி என பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதோடு சாலை வசதிகள், தண்ணீர் சப்ளை, இது தவிர இன்னும் பல சலுகைகள் பெற்றுத் தரப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு பூங்கா பணிகள்
இதற்காக கர்நாடக அரசு ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் அருகில் ஹர்லூரில் 1200 ஏக்கரில் இரண்டாம் கட்ட விண்வெளி பாதுகாப்பு பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் பற்பல சலுகைகளுடன் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பலவும் கர்நாடகாவில் முதலீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு துறை உற்பத்தி மையம்
முன்னதாக பிரதமர் மோடி ஒரு அறிக்கையில் நாடடின் அன்னிய நேரடி முதலீட்டில், கர்நாடகாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், ஆத்ம நிர்பார் திட்டத்தை தொடர்ந்து விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் கர்நாடக மாநிலம் பாதுகாப்பு துறையின் மையமாக மாறும் என்று கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.