இந்தியாவில் தற்போது எல்லோரும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கார் மற்றும் அதன் வெற்றியைப் பார்த்து வியந்துக்கிடக்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப் பின் அதிநவீன கார் மட்டும் இல்லை ஒரு மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தளத்தையே டெஸ்லா அமெரிக்காவில் உருவாக்கியுள்ளது. இதன் பின்பு தான் அமெரிக்க அரசும் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இத்தளத்தை மேம்படுத்தித் தற்போது மொத்த அமெரிக்காவையும் எவ்விதமான தடையுமின்றி எலக்ட்ரிக் கார் மூலம் பயணிக்க முடியும்.
இதுபோன்ற தளம் இந்தியாவில் உள்ளதா என்றால்..? நிச்சயம் அதற்கான பதில் இல்லை என்பது தான். ஆனால் இதைத் தான் தற்போது இந்தியாவில் டாடா உருவாக்கி வருகிறது.
எலக்ட்ரிக் எகோசிஸ்டம்
இந்தியாவில் கார் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதன் விலையும், அதைப் பயன்படுத்துவதற்கான தளம் இந்தியாவில் இல்லாத போது எவ்வளவு பெரிய காரை வெளியிட்டாலும் விற்பனை ஆகாது என்பது தான் உண்மை.
இதனை உணர்ந்த டாடா குழுமம், தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் கார் பயன்படுத்துவதற்காக மொத்த எகோசிஸ்டத்தையும் உருவாக்க முயற்சி எடுத்துள்ளது.
டாடா குழுமம்
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதற்கான வர்த்தகச் சந்தை உருவாக்கவும் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் டாடா குருப் களத்தில் இறங்கியுள்ளது.
டாடா குழுமம் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பது மட்டும் அல்லாமல் பேட்டரி தயாரிப்பு, சார்ஜிக் ஸ்டேஷன், பேட்டரி ரீசைக்கிளிங் தொழிற்சாலை ஆகிய அனைத்தையும் தனது நிறுவனங்களை வைத்தே உருவாக்க முடிவு செய்துள்ளது.
8 நிறுவனங்கள்
டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ், டாடா பவர், டாடா க்ரோமா, டிசிஎஸ் உட்படச் சுமார் 8 நிறுவனங்கள் இந்தியாவில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார் எகோசிஸ்டம்-ஐ உருவாக்குகிறது.
டாடா குழுமத்தின் படி டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் தயாரிக்கவும், டாடா பவர் நாட்டின் 20 முக்கிய நகரங்களில் 750 சார்ஜிக் ஸ்டேஷன் அமைக்கவும், டிசிஎஸ் நிறுவனம் சார்ஜிக் சேவையைப் பயன்படுத்த ஆன்லைன் புக்கிங் மற்றும் பேமெண்ட் தளத்தையும், டாடா கெமிக்கல்ஸ் பேட்டரி ரீசைக்கிளிங் சென்டரை அமைக்க உள்ளது, இதுமட்டும் அல்லாமல் இதே டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க நிலத்தைக் கையகப்படுத்தும் வேலைகளையும் செய்ய உள்ளது.
டாடா க்ரோமா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் குறித்து மார்கெட்டிங் செய்யவும், சில கிளைகளில் டெஸ்ட் ட்ரைவ் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் தலைவலி
இந்திய வர்த்தகச் சந்தையின் மிகப்பெரிய சுமை என்றால் தங்கமோ, ஆயுத கொள்முதலோ இல்லை பெட்ரோல், டீசல் பயன்பாட்டிற்காக நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் தான். ஒவ்வொரு மாதம் இந்திய அரசு செய்யும் அதிகப்படியான கச்சா எண்ணெயின் காரணமாக நாட்டின் வர்த்தக வித்தியாசம் மிகவும் அதிகமாகும்.
இதைக் கட்டுப்படுத்த நமக்கு இருக்கும் ஓரே கருவி எலக்ட்ரிக் வாகன பயன்படுத்துவது தான்.


Click it and Unblock the Notifications