நாட்டில் கொரோனாவினால் மக்கள் இன்னும் எத்தகைய மாற்றங்களையெல்லாம் காண போகின்றனரோ தெரியவில்லை.
ஏனெனில் முதலீடு, சேமிப்பு, செலவினங்கள் குறைப்பு, வர்த்தகம், நிரந்தர வேலை என பலவற்றின் முக்கியத்துவத்தை மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.
இதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த டீமேட் கணக்கு எண்ணிக்கை. ஒன்று லாக்டவுன் காலத்தில் வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள், வீட்டில் இருந்து என்ன செய்யலாம். எப்படி வருமான ஈட்டலாம். அதற்கு என்ன வழி என்று இணையத்தில் தேடினர். இந்த சமயங்களில் அவர்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வர்த்தகம் செய்வது தான்.
டீமேட் கணக்குகள்
சரி வீட்டில் இருந்து எப்படி வருமானத்தினை ஈட்டுவது என எண்ணுகையில் தான் பலருக்கு பங்கு சந்தை கைகொடுத்தது எனலாம். கடந்த ஜனவரி மாதத்தில் 39.6 மில்லியன் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் இறுதியில் 40.9 மில்லியனாக அதிகரித்தது. ஆனால் அதற்கு அடுத்தாற்போல் லாக்டவுன் காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாதம் 1 மில்லியன் டீமேட்
ஏப்ரல் மாதத்தில் 41.5 மில்லியனாக இருந்த டீமேட் கணக்கு, மே மாதத்தில் மொத்தம் 42.2 மில்லியனாகவும், ஜூன் மாதத்தில் 43.2 மில்லியனாகவும், ஜூலை மாதத்தில் 44.3 மில்லியனாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 45.3 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. இதே செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1.3 மில்லியன் கணக்குகள் அதிகரித்து 46.6 மில்லியனாகவும், அக்டோபரில் 47.6 மில்லியனாகவும் டீமேட் கணக்குகள் மொத்தம் தொடங்கப்பட்டுள்ளது. ஆக இது தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக 1 மில்லியனுக்கும் மேலான டீமேட்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சாதனை எண்ணிக்கை
2020ம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 4.9 மில்லியன் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் அதிகபட்சமாக 4 மில்லியன் டீமேட் கணக்கும், கடந்த மூன்று ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு 4.3 மில்லியன் டீமேட் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு ஆண்டில் சாதனை படைக்கும் விதமாக ஏப்ரல் - அக்டோபர் மாத காலகட்டத்தில் மட்டும் 6.8 மில்லியன் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டு சாதனை எண்ணிக்கையை எட்டியுள்ளன.
முதலீட்டாளர்கள் அதிகரிப்பு
சந்தை கடந்த மார்ச் மாத குறைந்தபட்ச லெவலில் இருந்து, 77% மேல் ஏற்றம் கண்டுள்ளது. இதனால் புதிய முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ளனர். மொபைல் மூலம் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜுன் முதல் இரட்டை இலக்க வளர்ச்சியினை எட்டியுள்ளது. அக்டோபரில் 17.6% வளர்ச்சியில் இருந்து, நவம்பரில் 18.5% வளர்ச்சியினை எட்டியுள்ளது.