இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களின் ஒன்றான அதானி குரூப் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக ஆயுத தயாரிப்பு மற்றும் அதன் விற்பனையில் இறங்கியுள்ளது. கெளதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குரூப்-இன் இந்த முடிவு முதலீட்டாளர்கள் மத்தியிலும், சந்தை வல்லுனர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆயுத உற்பத்தியில் மிகவும் குறைந்த அளவிலான நிறுவனங்கள் மட்டுமே உள்ளது, ஆனால் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திடம் துப்பாக்கி முதல் போர் கப்பல், போர் விமானங்களைத் தயாரிக்கும் அளவிற்கு உரிமம் பெற்றுள்ளார், ஆனால் வர்த்தகத்தைத் துவங்கவில்லை. இந்நிலையில் பாதுகாப்புத் துறையில் முதல் முறையாக அதானி இறங்கியுள்ளார்.
அதானி குரூப்
குவாலியர் பகுதியில் இருக்கும் ஒரு தொழிற்சாலை மெசின் துப்பாக்கி, கார்பைன்ஸ், மற்றும் இதர சிறிய ரக ஆயுதங்களைத் தயாரித்தும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்து வருகிறது
இந்நிலையில் அதானி குரூப் இந்த நிறுவனத்தின் முழுவதுமாகக் கைப்பற்றியுள்ளார்.
இஸ்ரேல் நிறுவன கூட்டணி
இந்த நிறுவனத்தை அதானி குரூப் தனியாளாக வாங்கவில்லை, இஸ்ரேல் அயுத உற்பத்தி நிறுவனமான IWI உடன் இணைந்து கைப்பற்றியுள்ளது. இக்கூட்டணியில் அதானி குரூப் 51 சதவீத பங்குகளும், IWI நிறுவனம் 49 சதவீத பங்குகளும் வைத்துக்கொண்டு வர்த்தகத்தை நடத்த உள்ளது.
இக்கூட்டணி மூலம் எதிர்காலத்தில் ஆளில்லா விமானம் முதல் ஹெலிக்காப்டர் வரையிலான பெரிய விமானங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் அதற்கான தளத்தையும் அதானி குரூப் பெற உள்ளது.
மேக் இன் இந்தியா
இந்தக் குவாலியர் தொழிற்சாலை 2017ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இத்தொழிற்சாலை துவங்கப்பட்டது. மேலும் இந்த நிறுவன கைப்பற்றல் குறித்து அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் ஆஷிஷ் ராஜ்வன்ஷி கூறுகையில், "நாங்கள் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், தற்போது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான சிறிய ரக அயுதங்கள் தேவைப்படுவதால் அதை மையமாக வைத்து வர்த்தகத்தை நகர்த்தத் திட்டமிட்டு உள்ளோம்." எனத் தெரிவித்தார்.
அதானி மாஸ்டர் பிளான்
அதானி குழுமத்தின் இந்தத் திடீர் முடிவுக்கு முக்கியக் காரணம், மத்திய அரசு உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்காக மிகப்பெரிய எண்ணிக்கையில் பல திட்டங்களை வைத்துள்ளது. அதைக் கைப்பற்றும் முயற்சியில் தான் தற்போது இந்தக் குவாலியர் நிறுவனத்தைப் பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது.
IWI நிறுவனம்
அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு அறிவித்துள்ள 16,400 லைட் மெஷின் துப்பாக்கி தயாரிப்பதற்காகத் திட்டத்தின் கடைசிக் கட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இத்திட்டத்திற்காகப் போட்டிப் போடும் நிறுவனங்களில் IWI நிறுவனம் முதன்மையாக உள்ளது. இதன் காரணமாகத் தான் அதானி இந்த இஸ்ரேல் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு அறிவித்துள்ள 41,000 துப்பாக்கி தயாரிப்பு என்கிற மற்றொரு திட்டமும் இக்கூட்டணிக்குத் தான் வரும் என அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.