கொரோனா நெருக்கடிக்கும் மத்தியில் இந்தியாவில் ஆங்காங்கே சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அதிலும் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு தேவையான மருத்துவ மூலதன பொருட்கள் சப்ளை மீது, விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என அமெரிக்கா கூறியது.
இந்தியாவுக்கு உதவ தயார்
எனினும் தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளும், இறப்பு எண்ணிக்கை, மக்கள் படும் அவதிகளையும் உலக நாடுகள் கவனித்து வருகின்றன. இந்த நிலையில் பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன் வந்துள்ளன. இதற்கிடையில் முதலில் இந்தியாவுக்கு உதவ முடியாது என கூறிய அமெரிக்கா, தற்போது அமெரிக்கா உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு உதவ ரெடி
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர். இது குறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரவலில் ஆரம்ப காலத்தில் இந்தியா எங்களுக்கு உதவியது. இந்திய மக்கள் தற்போது கஷ்டப்படும்போது, நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
இந்திய மக்களுக்காக பிரார்த்தனை
அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ், அமெரிக்கா, இந்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. கோவிட் -19 பெருந்தொற்றினை கட்டுப்படுத்த அவசர உதவிகளை செய்ய உறுதி பூண்டுள்ளோம். இந்திய மக்களுக்காகவும், அவர்களுக்காக அயராது பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்காகவும் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய நண்பர்களுக்காக பணியாற்றிக் கொண்டுள்ளோம்
இதே சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்தியாவில் பெருகி வரும் கொரோனா தொற்று அமெரிக்காவை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் எமது இந்திய நண்பர்களுக்கும், அவர்களோடு இணைந்து பணியாற்றுவோருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் இரவு பகலாக பணியாற்றிக் கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications