கொரோனா பற்றிய செய்தியை நாம் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் இன்றைய செய்தித்தாள், டிவி, வானொலி என அனைத்திலும் அதை பற்றி படித்திருப்போம், பார்த்திருப்போம், கேட்டிருப்போம்.
அந்தளவுக்கு சீனாவை ஆட்டிப்படைத்து வருவதோடு மட்டும் அல்லாமல், உலக நாடுகளிலும் தற்போது தான் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது.
சுமார் 1,500 பேரை பலி கொண்டுள்ள இந்த கொடிய வைரஸால் அதிகரித்து வரும் இறப்பு ஒரு புறம் எனில், மறுபுறம் சீனாவின் வர்த்தகமே ஸ்தம்பித்து போயுள்ளது.
சீனாவுக்கு பெருத்த அடி
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சீனாவின் முக்கிய வணிகங்களும் முதலீட்டாளர்களும் கொரோனாவின் தாக்கத்தினால் கிட்டதட்ட முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் வணிக வளாகங்களும், தொழில்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே சீனா பொருளாதார ரீதியாக பெருத்த அடி வாங்கியுள்ளது.
1% ஜிடிபியை விழுங்கிவிடும்
மேலும் எத்துணை காலத்திற்கு இந்த தாக்கம் நீடிக்கும். இதனால் சீன பொருளாதாரம் எவ்வளவு பாதிக்கும். உலக பொருளாதாரம் எவ்வளவு பாதிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஆய்வாளர்கள் தற்போதைய நிலையில் நடப்பு காலாண்டில் 1% ஜிடிபியை இது விழுங்கிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியில் சீனா
இந்த கொடிய வைரஸால் உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் பிரதான நிலப்பரப்பில் பெரிய சில்லறை சங்கிலிகள் முதல் ஆட்டோமொபைல் முதல், ஸ்மார்ட்போன் உற்பத்தி வரை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சார்ந்துள்ள நாடுகள் பாதிப்பு
இதன் விளைவாக பொருட்களுக்கு அதிகம் சீனாவை சார்ந்திருக்கும் நாடுகள், அதிலும் சிறு உதிரிபாகங்கள் மற்றும் சிறு கூறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள் அதிகளவில் இந்த கொரோனாவால் பாதிக்கப்படும் என்று சந்தை நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். ஆகா சீனாவை சார்ந்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது ஒரு வகையில் இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும்
சர்வதேச ஜிடிபியிலும் வீழ்ச்சி
இது குறித்து சாத்தியமான அபாயங்கள் குறித்து MarketsMojo.com தளத்தின் சிஐஓ சுனில் தமானியா கூறுகையில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் பங்கு 12% ஆக இருப்பதால், உலக பொருளாதார வளர்ச்சியில் கொரோனா வைரஸ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சீனா மீள இரண்டு காலாண்டுகள் ஆகும்
மேலும் சீனாவிலிருந்து தங்கள் மூலப்பொருட்களையோ அல்லது வேறு கூறுகளையோ ஆதாரமாகக் கொண்ட பல தயாரிப்பாளர்களுக்கு கடுமையான மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் சுனில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸூக்கான தீர்வு இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில், சீன உற்பத்தி நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதற்கு இரண்டு காலாண்டுகள் காத்திருக்க கூடும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.
உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பு
ஆக சீனாவில் நிலவி வரும் இந்த பதற்றத்தால் உலகப் ஜிடிபியில் இது 0.3% பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமான சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மற்ற நாடுகள், இந்தியா பங்களாதேஷ் மற்றும் வியட்னாம் போன்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை செய்ய இது வழிவகுக்கும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்தியா பெஸ்ட்
அதிலும் தற்போது இந்தியா கவர்ச்சிகரமான முதலீடுகளை ஈர்க்கும் பட்டியியலில் உள்ளது. இதனால் இந்தியா நல்ல உற்பத்தி மையமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும் பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் அதன் சில வர்த்தக கொள்கைகளை மாற்றியமைக்கிறது. சொல்லப்போனால் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தினை புதுபிக்க வழிவகுத்துள்ளது என்று தனியார் நிறுவன அதிகாரி ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு
கடந்த புதன்கிழமையன்று கொரோனாவின் தாக்கம், இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இது ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்தியா தொடர்ச்சியான சவால்களை சந்தித்து வருகிறது. உதாரணமாக இந்தியாவில் மருந்து நிறுவனங்கள், மொபைல் உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் ஆட்டோமொ[பைல் துறைகாள் சீனாவில் இருந்து வழங்கப்படும் மூலப்பொருட்கள் இல்லாமையால் குறைந்த உற்பத்தியை காணலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பும் உண்டு
இந்த தொற்று தாக்கம் நீண்ட நாளுக்கு தொடர்ந்தால், ஒரு சில துறைகள் கட்டுப்படுத்த முடியாது. மேலும் இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம். குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், ஐடி உள்ளிட்ட துறைகளில் சில தலைவலிகளை ஏற்படுத்தலாம். எனினும் சீனாவினை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதால், சீனாவுக்கு வெளியில் தங்களது உற்பத்தியை சில நிறுவனங்கள் தொடரலாம். ஆக அந்த வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.