உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வந்தாலும் தன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளைச் சீனாவில் தான் தயாரிக்கிறது.
சமீப காலமாக அமெரிக்கா - சீனா இடையே பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகள் ஏற்படவே,சீனாவில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் ஆப்பிள் உட்படப் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் சீனாவில் 5இல் ஒரு பங்கு உற்பத்தியைச் சீனாவில் குறைத்துவிட்டு இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
ஆப்பிள்
சீனாவில் இருந்து உற்பத்தி பணிகளை இந்தியாவிற்கு மாற்றத் திட்டமிட்டு வரும் ஆப்பிள், இந்தியாவில் ஏற்கனவே தனது ஒப்பந்த உற்பத்தியாளர்களை வைத்து புதிய உற்பத்தி தளத்தை எங்கு அமைப்பது. இதை எப்படிச் சாத்தியம் ஆக்குவது என்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், இந்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இவை அனைத்தும் சாத்தியமானால் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்குச் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் கருவிகள் ஏற்றுமதி செய்யப்படும்.
விஸ்ட்ரான் மற்றும் பாக்ஸ்கான்
இந்தியாவில் உருவாகப்படும் அனைத்து ஆப்பிள் கருவிகளும், விஸ்ட்ரான் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்கிறது. தற்போது அதிகரிக்கப்படும் உற்பத்தியும் இவ்விரு நிறுவனங்களை வைத்து தான் தயாரிக்க முடிவு செய்துள்ளது ஆப்பிள்.
PLI திட்டம்
ஆப்பிளின் திட்டம் நிறைவேறினால் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் கருவிகள் உள்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மேலும் ஆப்பிள் production-linked incentive (PLI) திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற உள்ளதாகவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
ஆப்பிள் பொருட்களுக்கு இந்தியாவில் பெரிய சந்தை இல்லை என்றாலும், உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் இந்தியா பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் சீனாவில் ஒரு வருடத்திற்கு ஆப்பிள் சுமார் 220 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைத் தயாரிக்கும் நிலையில், 185 பில்லியன் டாலர் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தினால் மட்டும் சீனாவில் சுமார் 48 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது.
தற்போது இந்தியாவிற்கு ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை மாற்றுவதன் மூலம் இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.
இலக்கு
இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு அரசை குஷிப்படுத்தியுள்ளது.
சாம்சங் திடீர் முடிவால் மயானம் ஆன சீன நகரம்.. ஆட்டம் துவங்கியது..!