பீகாரில் கங்கை நதியில் கட்டப்படும் மிகப்பெரிய பாலம் சம்பந்தமான 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய திட்டத்தினை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்த திட்டத்தில் சீன நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளது என்றும் முக்கிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஒப்பந்தக்காரர்களில், இரண்டு பேர் சீன நிறுவனங்கள் என்பதால், பீகார் அரசாங்கத்தின் உயர்மட்ட நிர்வாகம் டெண்டரை ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னென்ன திட்டம்
இந்த திட்டத்தில் 5.6 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான பாலம், அதோடு சில சிறு சிறு பாலங்கள், அண்டர்பாஸஸ் மற்றும் ரயில் ஓவர் அண்டர்பாஸ் உள்ளிட்ட பல இதில் அடங்கும். இந்த முழு திட்டத்திற்கான மொத்த செலவு 2,900 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
என்ன காரணம்
கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம் அடைந்தனர். ஆக மத்திய அரசின் இந்த அதிரடியான முடிவின் பின்னணியில் இந்த தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
சீன பொருட்கள் வேண்டாம்
சீனா இந்தியா எல்லை பதற்றமான நிலைக்கு மத்தியில், சீன பொருட்கள் வேண்டாம், #boycottchina, # boycottchineseproducts என்ற பரப்புரைகள் அதிகரித்து வருகின்றது. இதனால் அகில இந்திய வணிகர்கள் சங்கம் கூட சுமார் 500 பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்க போவதாக கூறியது குறிப்பிடத்தக்கது, ஆக மக்களின் மத்தியில் இப்படி ஒரு எண்ணம் மேலோங்கி வர, சீன டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி சேது திட்டம்
இந்த திட்டமானது மத்திய அமைச்சரவைக் குழுவால், கடந்த 2019 டிசம்பர் 16 அன்று மகாத்மா காந்தி சேது (Mahatma Gandhi Setu) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டமானது பாட்னா, சரண் மற்றும் வைசாலி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கங்கை நதியில் மகாத்மா காந்தி சேதுக்கு இணையாக, உத்தேச மகாசேது திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என கூறப்படுகிறது.
திட்டம் ரத்து
இந்த திட்டத்தின் படி, நான்கு அண்டர் பாஸ் (vehicular underpasses), ஒரு ரெயில் ஓவர் பிரிட்ஜ், 1.58 ரூட் பிரிட்ஜ், ஃப்ளைஓவர், நான்கு சிறிய பாலங்கள், ஐந்து பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 13 சாலை சந்திப்புகள் என மிக பிரமாண்டமாக கட்டப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான கட்டுமான காலம் மூன்றரை ஆண்டுகள் மற்றும் ஜனவரி 2023-க்குள் முடிக்கப்பட இருந்தது எனவும் அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் இந்த திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.