இந்திய ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் வர்த்தகம் இல்லாமல் இத்துறை தவித்து வந்தது.
இந்தச் சூழ்நிலையில் தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் மற்றும் சீனாவின் SAIC மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை அடைந்தது மட்டும் அல்லாமல் இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனங்கள் பட்டியலிலும் இணைந்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களின் வெற்றியைக் கண்டு மிரண்டு போன சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவிற்கு வந்தே ஆகனும் எனத் திட்டமிட்டு அனைத்து விதமான பணிகளை முடித்துத் தயாராக இருந்தது. ஆனால் நடந்தது வேறு, இனி நடக்கப்போவதும் வேறு..!
இந்தியா ஆட்டோமொபைல் சந்தை
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருப்பதை உணர்ந்த, சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் கடந்த வருடமே தொழிற்சாலை அமைப்பதற்கும், அலுவலகத்தை அமைப்பதற்கும் அனைத்து விதமான பணிகளையும் முடிந்து விட்டு இந்தியாவில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யத் தயாராக இருந்தது.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை
இந்தச் சூழ்நிலையில் தான் இந்தியா - சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியிலான சண்டை அதிகமான நிலையில் மத்திய அரசு சீன முதலீடுகளுக்குத் தடை விதித்தது. கிட்டதட்ட ஒருவருடம் ஆன நிலையிலும் மத்திய அரசு சீன முதலீடுகள் குறித்து எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை. இதனால் கிரேட் வால் மோட்டார்ஸ் புதிய முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலை
கிரேட் வால் மோட்டார்ஸ் முதலில் கார்களின் உதிரி பாகங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, இந்திய தொழிற்சாலையில் காரை கட்டமைத்து விற்பனை செய்யத் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டுத் திட்டத்திற்கு தொடர்ந்து அரசு ஒப்புதல் அளிக்காமல் ஆலோசனையிலேயே வைத்துள்ள காரணத்தால் புதிய முடிவை எடுத்துள்ளது.
கார் இறக்குமதி
சீனாவில் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய எவ்விதமான பிரச்சனையும் இல்லாத நிலையில், உதிரி பாகங்களை இறக்குமதி செய்யாமல், காரை மொத்தமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது கிரேட் வால் மோட்டார்ஸ்.
திட்டமிட்ட வர்த்தக முடிவு
இதேபோல் இந்தியாவில் தனது வலிமையான வர்த்தகப் பிரிவான எஸ்யூவி கார்கள் மூலம் வர்த்தகத்தைத் துவங்க திட்டமிட்ட கிரேட் வால் மோட்டார்ஸ் தற்போது டி பிரிவு எஸ்யூவி, பி பிரிவு எலக்ட்ரிக் ஹேட்ச்மேக் கார்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
HAVAL பிராண்ட்
இந்தியாவில் பசுமை தொழில்நுட்பத்திற்கு அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால், கிரேட் வால் மோட்டார்ஸ் தனது HAVAL பிராண்ட் கீழ் ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
கிரேட் வால் மோட்டார்ஸ் போட்டி
இதன் மூலம் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சில தடைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் இறக்குமதி திட்டத்தின் மூலம் MG மோட்டார்ஸ் மற்றும் இதர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனத்திற்குப் போட்டியாக விளங்கும்.
ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலை
இந்தியாவில் 1996ஆம் ஆண்டுக் கார் உற்பத்தி துவங்கி அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடைசித் தொழிற்சாலையான புனே Talegaon தொழிற்சாலையைச் சுமார் 2000 கோடி ரூபாய்க்குச் சீனாவின் எஸ்யூவி கார் தயாரிப்பு நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, அடிப்படை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
MG Motors தொழிற்சாலை
எம்ஜி மோட்டார்ஸ் பாலோ செய்த அதே பார்மூலாவை தான் தற்போது கிரேட் வால் மோட்டார்ஸ்-ம் பாலோ செய்கிறது. 3 வருடத்திற்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் துவங்கிய 2வது தொழிற்சாலையான குஜராத், ஹாலோல் பகுதியில் இருக்கும் உற்பத்தி தொழிற்சாலையைச் சீனாவின் SAIC நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுத் தற்போது MG Motors நிறுவனத்தின் உற்பத்தி தளமாக இயங்கி வருகிறது.