நடப்பு ஆண்டு முடிய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் சீன -இந்திய பிரச்சனைகளை, அவ்வளவு எளிதாக நிச்சயம் யாரும் மறந்திருக்க முடியாது.
அதிலும் கொரோனாவின் வருகைக்கு பின்னர் சீனாவினை பற்றி நினைக்காத நாடுகளே இல்லை எனலாம். ஏனெனில் உலக நாடுகள் பலவற்றோடும் பிரச்சனை தான். எனினும் இந்திய சீன பிரச்சனை பெரும் பதற்றத்தினையே ஏற்படுத்தியது.
இப்படி பதற்றமான நிலைக்கு மத்தியில் தான் நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் 23 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
சீன பொருட்கள் வேண்டாம்
இதன் பிறகு இந்தியா - சீனா இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றது. அது சீனாவுடன் வர்த்தகத்தினை முறித்துக் கொள்ளும் அளவு இப்பிரச்சனை இருந்து வருகிறது. இப்பிரச்சனைக்களுக்கு மத்தியில் முதலில் ஒலித்த கோசம் சீன பொருட்கள் வேண்டாம் என்று தான். ஏன் அந்த சமயத்தில் அகில இந்திய வணிகர்கள் சங்கமே 500 சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது இதனையடுத்து சமூக வலைதளங்களிலும் #BoycottChineseProducts, #BoycottChina என்று பரவலாக பேசப்பட்டது.
சீனாவில் இருந்து இறக்குமதி?
அதோடு சீன பொருட்களை தவிர்த்து, இனி இந்திய பொருட்களையே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதன் முதல் கட்டமாக டிசம்பர் 2021-க்குள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 1 லட்சம் கோடி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளதாக இந்த வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. தற்போதைய நிலையில் சீனாவில் இருந்து ஆண்டுக்கு சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
சீன ஆப்கள் தடை
இதன் பிறகு சீனாவின் பிரபலமான டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 43 பிரபலமான செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 2ம் தேதி மேலும் 118 ஆப்களுக்கு தடை விதித்தது. பப்ஜி, டிக்டாக் போன்ற பிரபல ஆப்கள் இதில் அடக்கம். இந்த நடவடிக்கையானது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிய வந்ததால், இந்த தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மொத்தத்தில் சீனாவின் 267 ஆப்கள் தடைசெய்யப்பட்டது கவனிக்கதக்கது. இந்த ஆப்கள் இந்திய இணையவழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.
அன்னிய நேரடி முதலீட்டு விதிகள் மாற்றம்
நடப்பு ஆண்டில் இந்தியா எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் முக்கியமானது அன்னிய நேரடி முதலீட்டு விதிகள் மாற்றம். ஏனெனில் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சீனா தான். கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இந்த திருத்தத்தின் படி அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே, முதலீடு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இது சீனா நிறுவனங்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டது. அதோடு வரியும் கூட்டப்பட்டது. குறிப்பாக கட்டுபாடு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்தால், இறக்குமதியாளர் வர்த்தக அமைச்சகத்தின் Directorate General of Foreign Trade-யிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இப்படி அடுத்தடுத்தடுத்த பிரச்சனைக்களுக்கும் மத்தியில், சீனா - இந்தியா இடையே பிரச்சனைகள் இன்னும் நீடித்து வருகின்றது. இது இன்னும் எந்த மாதிரியான வர்த்தக பிரச்சனைகளை கொண்டு வரப்போகிறதோ தெரியவில்லை.