சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், அங்கு பல பகுதிகளில் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீனாவில் தற்போது மீண்டும் கடுமையான சூழலே இருந்து வருகின்றது.
சீனாவின் இந்த நடவடிக்கையால் ஆங்காங்கே மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகி வருகின்றது.
சமீபத்தில் சீனாவின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையிலும் கலவரம் வெடித்தது. இங்கு ஊழியர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தெறித்து ஓடிய ஊழியர்கள்
இதற்கிடையில் கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பயந்து, பலரும் தங்களுக்கு வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என அடுத்தடுத்து தெறித்து ஓடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் உற்பத்தியில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பாக்ஸ்கான் நிறுவனம் புதிய பணியமர்த்தலை உடனடியாக தொடங்கியது.
சலுகைகள் அறிவிப்பு
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் விடுமுறை எடுக்காமல் பணிபுரிபவர்களுக்கு, சில சலுகைகளையும் அறிவித்தது. மொத்தத்தில் உற்பத்தி எப்படியும் சரியக் கூடாது என்பதில் குறியாய் இருந்தது பாக்ஸ்கான். ஆனால் ஊழியர்களுக்கு இடையே சரியான சமூக இடைவெளி இல்லை, தங்கும் அறைகளில் ஏற்கனவே இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள சொல்வதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தவும் சரியான வசதிகள் இல்லை என்றும் கூறப்பட்டது.
தொற்று பயம்
இதனால் ஆலையில் கொரோனா பரவும் சூழல் இருப்பதாகவும், ஏற்கனவே தொற்றுகள் இங்கு கண்டறியப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் தற்போது புதியதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களும் 20,000-க்கும் மேற்பட்டோர் ஆலையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மேற்கொண்டு தற்போது பாக்ஸ்கானுக்கு சிக்கலாகவும் அமைந்துள்ளது.
உற்பத்தி பாதிக்ககூடாது?
செலவுகள் ஆகினாலும் உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது செலவு அதிகமே செய்தாலும், உற்பத்தி முழுமையாக செய்ய முடியுமா? என்ற சூழல் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ஆலையில் தொற்று அச்சத்தில் மத்தியில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சப்ளை போதாது?
குறிப்பாக வரவிருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு காலகட்டத்தில் தேவை என்பது அதிகம். ஆனால் இந்த கட்டத்தில் உற்பத்தி பாதிப்பு இருக்காது. இதனால் போதிய சப்ளை இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தேவை இருந்தும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனத்துக்கு அடி
கடந்த மாதம் தொடங்கிய இந்த பிரச்சனை இன்று வரையில் தொடர்ந்து கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட உற்பத்தியினை இந்த பாக்ஸ்கான் ஆலையில் தான் செய்யப்பட்டு வரும் நிலையில், இது நிச்சயம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரிய அடியாகத் தான் இருக்கும்.
இந்தியாவுக்கு வாய்ப்பாக அமையலாம்
மொத்தத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் நிலவி வரும் இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனம் இனி தனது உற்பத்திக்கு மாற்று இடங்களை ஆராயலாம். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் (சென்னை, பெங்களூர், ஓசூர் ) உள்ளிட்ட பகுதிகளில் தனது உற்பத்தியை செய்ய தொடங்கியுள்ளது. இதில் ஒசூரில் தனது உதிரிபாகங்களை டாடாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலை மேற்கொண்டு, இந்தியாவுக்கு வாய்ப்பாக அமையலாம்.