இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் சீனா இந்தியாவின் பிரச்சனைவும் புகைந்து கொண்டே வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா இடையேயான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், சீனா வேண்டாம், சீன பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரைகள் அதிகரித்து வருகின்றன.
இதனை எதிரொலிக்கும் விதமாகவே அரசு தரப்பிலும் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
சீனாவுக்கு எதிராக நடவடிக்கை
குறிப்பாக தொலைத் தொடர்பு துறை, இரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை என பலவற்றிலும், சீனா சம்பந்தப்பட்ட அனைத்தும் அரசு ரத்து செய்தது. அதோடு சீனாவின் 100க்கும் மேற்பட்ட ஆப்களையும் இந்தியா தடை செய்தது. இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல் தொடரில் ஸ்பான்சர் செய்யும் சீனாவின் நிறுவனமான விவோ நிறுவனமும் தற்போது ஒதுங்கியுள்ளது.
சீனா பயன்பாடு குறையத் தொடங்கியுள்ளது
ஆக சீனா இந்தியா எல்லை பதற்றத்திற்கு மத்தியில் வர்த்தகம் தொடங்கி பல துறைகளிலும் இந்த தடையானது பரவ தொடங்கியுள்ளது. அதோடு நுகர்வோர் மத்தியிலும் சீனா பொருட்கள் வேண்டாம் என்ற மன நிலையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா பொருட்களின் பயன்பாடானது குறையத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.
சீன பொருட்களுக்கு தடை
அகில இந்திய வர்த்தக கவுன்சில் கூட சில நூறு பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்யப்போவதாகவும் தெரிவித்து இருந்தது. இதற்கிடையில் சீனாவினைத் தவிர்த்தால் அது இந்தியாவுக்கு தான் பிரச்சனை. சொல்லப்போனால் உலகளவில் வர்த்தகம் செய்து வரும் சீனாவுக்கு இந்தியாவின் வர்த்தகம் ஒன்றும் பெரிதில்லை என்றும் கூறப்பட்டது.
விற்பனையில் மாற்றமில்லை
இது இப்படி எனில், சீனா சில்லறை நிறுவனங்கள் சில, சீனா பொருட்களின் விற்பனை அமோகமாகத் தான் உள்ளது. அப்படி எதுவும் தடையை நாங்கள் காணவில்லை. குறிப்பாக முன்னணி சீன பிராண்டுகளின் தரப்பு நிர்வாகிகள், சீனா ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளதாக மணிகன்ட்ரோல் செய்திகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியது.
வணிகம் எப்படி உள்ளது?
அதோடு சில்லறை விற்பனையிலும் சரி, இணைய வழி விற்பனையிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியது. எனினும் மறுபுறம் சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் #BoycottcChineseProducts என்ற ஹேஷ்டேக், நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. ஆனால் மறுபுறம் வணிகம் வழக்கம் போல் இருப்பதாக தி எக்னாமிக் டைம்ஸ் செய்தி அப்போது வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சி
ஆனால் இன்று இந்தியா டுடேவில் வெளியான அறிக்கை ஒன்றில், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது சீனாவின் ஏற்றுமதியானது, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 24.7% வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆக சீனாவின் ஏற்றுமதியானது இந்தியாவுக்கு 32.28 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீன பொருட்கள் புறக்கணிப்பு
இதற்கு முக்கிய காரணம் சீனாவின் ஆக்கிரமிப்பு பின்னர் சீனாவை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்புக்கு மத்தியில் இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையேயான மொத்த வர்த்தகம் 43.47 பில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது 18.6% சரிவாகும்.
ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சீனாவின் முக்கிய வர்த்தகமாக கருதப்படும் ஸ்மார்ட்போன் வர்த்தகம், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 81% ஆகும். ஆனால் தற்போது அது 72% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு நிச்சயம் பெருத்த அடியாகத் தான் வந்துள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு
ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி, ஜனவரி மாதம் முதல் 6.7% அதிகரித்து 11.09 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சீனா இந்தியாவில் இருந்து, 27,207 மீட்டர் பிவிசியை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 5,174 மீட்டருடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும்.
சீன நிறுவனங்கள் உரிமம் வாங்க வேண்டுமா?
ஆத்மா நிர்பார் பாரத் பிரச்சாரத்தின் கீழ், உள்ளூர் தொழில்களால் வழங்கக்கூடிய, சீன பொருட்களின் பட்டியலையும் அரசு ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இறக்குமதி செய்யப்படும் 20 துறைகளுக்கான பொருட்கள் இறக்குமதிக்கு, சீன நிறுவனங்கள் உரிமம் வாங்க நடவடிக்கை கொண்டு வர திட்டமிடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எந்தெந்த துறை?
குறிப்பாக டாய்ஸ், பர்னிச்சர், ஸ்போர்ட்ஸ் பொருட்கள், ஏர் கண்டிசனர்ஸ், தோல் காலாணிகள், அக்ரோ கெமிக்கல்ஸ், சிசிடிவி, இரும்பு, அலுமினியம், மின்சார வாகனம், ஆட்டோ உதிரி பாகங்கள், டிவி செட் அப் பாக்ஸ், எத்தனால், காப்பர் மற்றும் பயோ எரிபொருள், ரெடிமேடு உணவு பொருட்கள் உள்ளிட்டவற்று சீனா நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும் என கூறப்படுகிறது.
சுங்க வரியை அதிகரிக்கவும் திட்டம்
அதோடு இறக்குமதி செய்யப்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்கள் மீதான சுங்க வரியை 10 - 15% உயர்த்தவும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மருத்துவ துறையானது சீனாவிக்ல் இருந்து இறக்குமதியையே பெரிதும் சார்ந்துள்ளது. 68% APIs க்கள், மற்றும் 90% அதிகலாம ஆன்டிபயோடிக் மருந்துகளும் அண்டை நாடுகளில் இருந்தே இந்தியா பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.