மும்பை: இதுவரை இல்லாத அளவுக்கு வருவாயை மொத்தமாக நாசம் செய்திருக்கிறது கொரோனா, இதில் இருந்து மாநிலங்கள் மீள பல ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் மக்களின் வருவாயில் மட்டும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் காலி செய்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்த போதிலும் பழைய நிலை மீள வழியில்லாத அளவுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் கிடைத்த வருவாய், மீண்டும் கிடைக்க இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்பதே தெரியாத நிலை வணிக நிறுவனங்களுக்கு உள்ளது. இதே நிலை தான் அரசுகளுக்கும் உள்ளது.
வரி வருவாய்
இந்த இழப்பைச் சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் உயர்த்தப்பட்டன. வரி விதிப்பால் மது பானங்கள் விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஆனாலும் செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. ஏனெனில் நாட்டில் அனைத்து துறையிலும் பழைய படி உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அவை ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். உள்நாட்டிலும் விற்பனை அதிகரிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பழைய படி மக்களிடம் பணம் புழங்கி வரி வருவாய் அதிகரிக்கும்.
ஜிஎஸ்டியால் போச்சு
இப்படியாக சூழ்நிலைகள் இருக்க கொரோனாவால் வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்கள், தலைமையில் அரசு உயர்த்திய வரிகள் மேலும் விழுந்துள்ளன. ஜிஎஸ்டியை அமல்படுத்திய பின்னர் மாநிலங்களுக்கு நேரடி வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. இப்போது மத்திய அரசின் கையை எதிர்பார்த்து மாநிலங்கள் நிற்கின்றன. ஜிஎஸ்டி வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், தமிழகம் , மகாராஷ்டிரா உள்படபல்வேறு மாநிலங்கள் ஜிஎஸ்டி நிலுவை தொகை மத்திய அரசு இதுவரை வழங்காமல் தாமதித்து வருகிறது.
நிதிச்சந்தையில் கடன்
மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என, ரேட்டிங் நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டிருந்தன. மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடி மட்டும்தான் எனத் தெரிவித்த மத்திய அரசு, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு 97,000 கோடி மட்டுமே வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. இவற்றை வெளிச்சந்தையிலும், ரிசர்வ் வங்கி மூலமாகவும் திரட்டிக்கொள்ள யோசனை தெரிவித்தது. மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு நிதிச்சந்தையில் கடன் பெற்று, தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு முதல் தவணையாக 6,000 கோடி வழங்கி உள்ளது.
ஜிடிபியில் 4.6 சதவீதம் சரிவு
மாநிலங்களின் நிதி நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, மாநிலங்களுக்கு கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவற்றின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்து விடும். உதாரணமாக, மாநிலங்கள் கொரோனா பரவலுக்கு முன்பே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளன. அதன்படி, நிகர நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 2.4 சதவீதம். கொரோனா பரவலுக்கு பின்பு மாநிலங்கள் சமர்ப்பித்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை மாநிலங்களின் ஜிடிபியில் 4.6 சதவீதமாக இருக்கிறது. கொரோனா பரவல் மாநிலங்களின் கடந்த 3 ஆண்டு ஆதாயங்களை நாசம் செய்து விட்டது. இவை பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பல ஆண்டுகளாகும் என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்
வருவாய் சரிவு காரணமாக, மாநிலங்களின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது மூலதன செலவுகள் 1.26 லட்சம் கோடியை மாநிலங்கள் குறைத்திருக்கின்றன.முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 0.6 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மூலதன செலவுகளை மாநிலங்கள் குறைத்தது இதுவே முதல் முறையாகும்.. சராசரியாக மாநிலங்கள் ஜிடிபியில் சுமார் 0.5 சதவீதம் வரை மூலதன செலவுகளை குறைத்திருக்கின்றன. பட்ஜெட் மதிப்பீட்டிலும் இதே நிலைதான் உள்ளது. நாட்டின் பெரிய வருவாய் மாநிலங்கள், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மூலதன செலவை 35 சதவீதம் வரை குறைத்திருக்கின்றன.வருவாய் முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ள நிலையில் சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, பொருளாதார பாதிப்பில் இருந்து மாநிலங்கள் மீள்வது அவ்வளவு சுலபமல்ல என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.