சீனாவும், இந்தியாவும் கலாச்சார அடிப்படையிலும், எல்லை ரீதியாகவும் நெருக்கமாக இருக்கும் நாடு. ஆனால் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் போட்டி போடும் இரு பெரும் பொருளாதார சக்திகள்.
வெறும் பொருளாதார போட்டி என்கிற நிலை மாறி, இப்போது சீனா தன் சர்வாதிகாரத்தை உலகம் முழுக்க திணிக்கப் முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு நில பரப்புகளை உரிமை கோரிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவும் கொஞ்சம் கூட பின் வாங்காமல் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் அழுத்தங்களையும் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
கல்வான் பள்ளத்தக்கு பிரச்சனை
கடந்த சில வருடங்களாக, இந்தியாவின் தோக்லம் பகுதி தொடங்கி பல்வேறு சமயங்களில், பல்வேறு இடங்களில் இந்தியாவுக்கு பிரச்சனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த சீன, ஜூன் 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நம் இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கியது. இந்த தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
கடுமையான எதிர்வினை
இந்த தாக்குதலுக்குப் பின் இந்தியாவில், சீன புறக்கணிப்பு உணர்வு மிகவும் அதிகமாக வெளிப்படத் தொடங்கியது. இந்திய அரசு தன் ஒப்பந்தங்களை சீன கம்பெனிகளுக்கு கொடுக்க மாட்டோம் என்றது. சோலார் உபகரணங்கள் மீது கூடுதலாக வரி விதித்தது. முதல் கட்டமாக டிக் டாக் உட்பட பல சீன செயலிகள் மீது தடை விதித்தது. இரண்டாம் கட்டமாக சமீபத்தில் பப்ஜி உட்பட பல சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
சீனாவைச் சார்ந்து இருப்பது
இப்படி பல விஷயங்களைத் தடை செய்தாலும், இன்னமும் வணிக ரீதியாக, இந்தியா, சீனாவைத் தான் நம்பி இருக்டி இருக்கிறது. 2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியான 474.70 பில்லியன் டாலரில், 13.74 சதவிகிதம், அதாவது 65.26 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் & சேவைகள், சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்து இருக்கிறோம்.
முக்கிய ரசாயனங்கள்
இந்திய பொருளாதார சக்கரத்தில், ரசாயனங்கள் ஒரு முக்கிய வகிக்கின்றன. பல தரப்பட்ட, அத்தியாவசியமான ரசாயனங்களை வைத்து தான் மருந்து கம்பெனிகளுக்குத் தேவையான active pharmaceutical ingredients - API தொடங்கி, விவசாயத்துக்குத் தேவையான பூச்சிக் கொள்ளிகள் (Insecticides), பல்வேறு தொழிற்சாலை ரசாயனங்கள் வரை... தயாரித்து வருகிறோம்.
சீனாவை நம்பி இருக்கிறோம்
ஒரு வருடத்தில், இந்தியா, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு ரசாயனங்களை இறக்குமதி செய்கிறது. அதில் 85 - 90 சதவிகித ரசாயனம் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட இந்தியா, தன் ரசாயன தேவைக்கு, சீனாவைத் தான் நம்பி இருக்கிறது என்பதை இந்த தரவே நமக்குச் சொல்கிறது.
மத்திய ரசாயனத் துறை
இப்படி சீனாவைச் சார்ந்து இருப்பதை இந்தியா, குறைத்துக் கொள்ள விரும்புகிறது. அதற்காக மத்திய ரசாயனத் துறை, ஒரு தனி கமிட்டியை அமைத்து, ஒரு பெரிய திட்டத்தை தயாரித்துக் கொண்டு இருக்கிறதாம். மத்திய ரசாயனத் துறை இந்தியாவுக்குத் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் 75-க்கும் மேற்பட்ட ரசாயனங்களை பட்டியலிட்டு இருக்கிறதாம்.
ஊக்கத் தொகைத் திட்டம்
உள்நாட்டிலேயே இந்தியாவுக்குத் தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்க, ஒரு production linked incentive திட்டத்தை, மத்திய ரசாயனத் துறை ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில், 25,000 கோடி ரூபாய் கொண்டதாக இருக்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உள்நாட்டில் ரசாயனம்
இந்த திட்டத்தை முழுமையாக தயார் செய்து நிதி அமைச்சகத்தின் செலவீனங்கள் துறைக்கு அனுப்புவார்களாம். அதன் பின் கேபினெட்டுக்கு அனுப்பப்படும் என மத்திய ரசாயனத் துறை சொல்கிறது. இந்தியா - சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், ரசாயனத் துறையின் production linked incentive திட்ட ஆலோசனைகள் முக்கியமான ஒன்றாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறினால், விரைவில் இந்தியாவுக்குத் தேவையான ரசாயனங்கள் இந்தியாவிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.