2019ஆம் ஆண்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் மோசமாக இருந்தது என ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது எல்லோருக்கும் தெரியும். தற்போது 2019இல் ஐபிஓ-விலும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகத் தரவுகள் வெளியாகி உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அச்சத்தைக் கொடுத்து, பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையையும் இழந்துள்ளது.
2019ஆம் ஆண்டு முடியும் நிலையில் 2019ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் புதிதாகப் பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் பெற்ற முதலீட்டின் அளவுகள் 4 வருடச் சரிவை அடைந்துள்ளது.
4 வருடச் சரிவு
கடந்த சில வருடங்களாகப் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீட்டுத் தளமாக அமைந்திருந்தது.
ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையின் காரணமாக 2019ஆம் ஆண்டில் நிறுவனங்கள் பட்டியலிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஐபிஓ பிரிவில் கடந்த 4 வருடத்தைக் காட்டிலும் மிகவும் மோசமான முதலீட்டு ஈர்க்கப்பட்டு உள்ளது.
தரவு
இந்திய ஐபிஓ சந்தையில் நடப்பு ஆண்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வெறும் 2.8 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடாக ஈர்த்துள்ளது. இது இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டு செய்யும் முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தையின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுவே 2018ஆம் ஆண்டில் இதன் அளவு 5.5 பில்லியன் டாலராகவும், 2017ஆம் ஆண்டு 11.7 பில்லியன் டாலராகவும், 2016இல் 4 பில்லியன் டாலராக இருந்தது.
முக்கியத் துறைகள்
2018ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டில் நிதித்துறை நிறுவனங்கள் இந்த வருட மிகவும் குறைவான முதலீட்டை ஈர்த்துள்ளது. அதேபோல் தொழிற்துறை நிறுவனங்களும் குறைவான தொகையைத் தான் ஈர்த்துள்ளது. ஆனால் நுகர்வோர் நிறுவனங்கள் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் அதிகமான முதலீட்டா ஈர்த்து புதிய முதலீட்டு வாய்ப்பை இத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆனால் இந்த வருட ஐபிஓ-வை காப்பாற்றியது நிதியியல் மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் தான் என்பது உண்மை.
காரணம் என்ன..?
எப்போதும் இல்லாத அளவிற்கு ஐபிஓ-வில் இந்த வருடம் மிகவும் குறைவான அளவில் முதலீட்டை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பல துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது காலாண்டு, வருடாந்திர முடிவுகளில் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதேபோல் பல நிறுவனங்கள் திவாலாகியும், கடன் நெருக்கடியிலும் சிக்கியிருந்தது மற்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பயத்தையும் ஆர்வமின்மையும் ஏற்படுத்தியது. இது தான் ஐபிஓ பிரிவில் ஏற்பட்ட சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.