கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு மே 2ஆம் தேதி புறப்பட்டார். இந்த 3 நாள் பயணத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல உள்ளார்.
இந்நிலையில் மே 2ஆம் தேதி ஜெர்மனி அதிபர் மற்றும் மோடி சந்திப்பில் சுமார் 10 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. எதற்காக இந்த நிதியுதவி..!
ஓலாஃப் ஸ்கோல்ஸ் - நரேந்திர மோடி
திங்களன்று ஜெர்மனி தலைநகரான பெர்லினில் ஜெர்மன் சான்சிலரான ஓலாஃப் ஸ்கோல்ஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். 3 நாள் ஐரோப்பிய அரசு முறை பயணத்தில் முதல் கூட்டம் என்பதால் அதிகளவிலான முக்கியத்துவம் பெற்றது. இதேபோல் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு மோடி ஐரோப்பாவிற்கு முதல் முறையாகச் செல்கிறார் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.
10 பில்லியன் யூரோ
ஓலாஃப் ஸ்கோல்ஸ் - நரேந்திர மோடி சந்திப்பில் இந்தியா அதன் காலநிலை இலக்குகளை அடைய உதவும் வகையில் ஜெர்மனி சுமார் 10 பில்லியன் யூரோ (10.51 பில்லியன் அமெரிக்கா டாலர்) அளவிலான தொகையை அளித்து உதவி செய்ய உள்ளதாக உறுதியளித்தார்.
ஓரே நோக்கம்
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் போன்றவற்றில் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளின் நோக்கம் ஓரே மாதிரியாக இருக்கிறது எனப் பெர்லினில் ஜெர்மன் சான்சிலரான ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் மாற்று கருத்து இருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படும் பட்சத்தில் ரஷ்யாவின் போர் குறித்துப் பிரதமர் மோடி பேசுகையில் இந்தப் போரில் யாரும் வெற்றி பெறமாட்டார், அனைவரும் தோற்றுவிடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எப்போதும் அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று மோடி கூறினார்.
நரேந்திர மோடி
2014-ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இந்தியாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்பது இன்றளவும் முக்கிய பேசு பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் ஓலாஃப் ஸ்கோல்ஸ் - நரேந்திர மோடி சந்திப்பு முடிந்த பின்பு மோடி, தயாரிக்கப்பட்ட அறிக்கைகளைப் படித்துவிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை ஏற்கவில்லை என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
G7 உச்சி மாநாடு
மேலும் ஜூன் மாதம் ஜெர்மனி நாட்டில் நடக்க உள்ள G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள விருந்தினராக அழைக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் திங்கட்கிழமை கூறினார்.