இந்திய ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட முக்கியமான கருத்துக் கணிப்பில் இந்த வருடம் புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும் என அதிகளவில் நம்புகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. இதனால் 2021ஆம் வர்த்தகச் சந்தை இயல்பான நிலைக்கு மாறுவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
உலகின் முன்னணி ஊழியர்களுக்கான சமுக வலைத்தளமான லிங்கிடுஇன் தளத்தில் இந்திய ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 5ல் 2 பேர் 2021ல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
லிங்கிடுஇன் கருத்துக்கணிப்பு
சேல்ஸ்போர்ஸ் உடனான கடும் போட்டிக்கு மத்தியில் மைக்ரோசாப்ட் லிங்கிடுஇன் நிறுவனத்தை வாங்கியது. இது ஊழியர்களுக்கான பிரத்தியேக சமுகவலைதளமாக விளங்குவதால் ஊழியர்கள் மட்டுமே இத்தளத்தில் உள்ளனர்
இந்தத் தளத்தில் இந்திய ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 5ல் 2 பேர் 2021ல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட இதே ஆய்வில் வெறும் 19 சதவீத ஊழியர்கள் மட்டுமே நம்பிக்கை தெரிவித்த நிலையில், தற்போது இதன் அளவு 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் வளர்ச்சி
இதேபோல் 2021ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் தங்களது நிறுவனம் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை அடையுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குச் சுமார் 53 சதவீதம் பேர் கண்டிப்பாக வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதேவேளையில் சுமார் 47 சதவீதம் பேர் பெரிய அளவில் வளர்ச்சி அடையாது எனத் தெரிவித்துள்ளது, இந்திய வர்த்தகச் சந்தையின் உண்மையான நிலையைக் காட்டுகிறது.
இந்திய சந்தையின் மீது நம்பிக்கை
இந்த ஆய்வின் மூலம் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை உடன் இருப்பதையும், ஆபத்து வரும் வேளையில் எதிர்கொண்டு தொடர்ந்து வர்த்தகம் நடத்துவதற்கும் தயாராக உள்ளனர் என்பது விளங்குகிறது. இதேபோல் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மத்தியில் இந்தியச் சந்தை மீதான நம்பிக்கை 50 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
வேலைவாய்ப்பு சந்தை
இதே ஏப்ரல் முதல் நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவில் புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருவதாகப் பல வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் கல்வி
இதேபோல் 2020ல் இந்திய ஊழியர்கள் அதிகளவில் ஆன்லைன் கல்வி பயன்படுத்தித் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் 2021 சந்தையில் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் காத்துக்கொண்டு இருப்பதாக ஆன்லைன் கல்வி அமைப்புகள் கூறிவருகிறது.