2020 ஏப்ரல் மாதம் மத்திய தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் எந்தொரு நாட்டைச் சேர்ந்த நிறுவனமோ, தனிநபர் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இனி, நேரடியாக முதலீடு செய்ய முடியாது. அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே இந்தியாவில் முதலீடு செய்ய முடியும் என அறிக்கையை வெளியிட்டது.
சீனாவின் திட்டம்
இந்த உத்தரவின் மூலம் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மோசமான வர்த்தக நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள இந்திய நிறுவனங்களை அண்டை நாட்டு நிறுவனங்களும் மற்றும் தொழிலதிபர்களும் கைப்பற்றுவதைத் தடுக்க இந்த முதலீட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சீன நிறுவனங்கள் தான். குறிப்பாக இந்த உத்தரவு இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை ஏற்பட்ட நேரத்தில் விதிக்கப்பட்டது.
இந்தியா சீனா எல்லை பிரச்சனை
இந்தியா சீனா எல்லையில், சீன ராணுவத்தின் தாக்குதலின் காரணமாக இரு நாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், இந்தியாவில் சீன முதலீடுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது.
120 அன்னிய முதலீட்டு விண்ணப்பங்கள்
இந்தக் கட்டுப்பாடுகளின் படி இந்தியாவில் துறை வாரியான வித்தியாசம் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பும் சீன நிறுவனங்களும், சீன அமைப்புகளும் முதலில் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்பே முதலீடு செய்ய வேண்டும் எனக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய அரசு.
இதன் வாயிலாக ஏப்ரல் மாதம் முதல் சீனாவில் இருந்து சுமார் 120 அன்னிய முதலீட்டு விண்ணப்பங்கள் இந்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ப்ரவுன்பீல்டு நிறுவன முதலீடுகள்
சீனா முதலீடுகளை ஆய்வு செய்யவும், ஒப்புதல் அளிக்கவும் மத்திய அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்தக் குழு செய்த ஆய்வின் படி பெரும்பாலான சீன நிறுவனங்களின் முதலீடுகள் ப்ரவுன்பீல்டு நிறுன முதலீடுகளாக உள்ளது, அதாவது இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு.
மத்திய அரசின் கணக்கின் படி பெரும்பாலான சீன முதலீடுகள் இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் தான்.
13,000 கோடி ரூபாய் முதலீடு
இதன் படி ஏப்ரல் மாதம் முதல் இந்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட 120 முதல் 130 சீன நாட்டின் அன்னிய முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 12,000 முதல் 13,000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டு மதிப்புடையது.
சீன முதலீட்டு அளவில் வித்தியாசம்
இதேவேளையில் ஏப்ரல் 2000 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் சீனா இந்தியாவில் முதலீடு செய்த மொத்த அன்னிய முதலீட்டின் அளவு வெறும் 15,526 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2020ஆம் ஆண்டில் கொரோனா பாதித்த 9 மாத காலகட்டத்தில் சீனா இந்தியாவில் 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தயாரானது.
இதேபோல் பல சீன நிறுவனங்கள் அரசுத் திட்டங்களுக்கான கான்டிராக்ட் பெறவும் அன்னிய முதலீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.