பொருளாதாரச் சரிவாலும், நிதி நெருக்கடியாலும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் இலங்கை மக்கள் போராட்டம் எழுந்த நாளில் இருந்து சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவிக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தான் இலங்கை அரசியல் தலைகீழாகப் புரண்டது, இத்தகைய சூழ்நிலையில் புதிதாக அமைந்த அரசு எடுத்த பல முடிவுகள் குறிப்பாக வரியை உயர்த்தி அரசின் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களை அறிவித்து ஐஎம்எப் அமைப்பிற்கு நம்பிக்கை கொடுத்த நிலையில் தற்போது பெரும் தொகையை நிதியுதவியாக அளித்துள்ளது.
மாதத்தின் முதல் நாள் வெளியான இந்த அறிவிப்பால் இலங்கை அரசும் சரி, மக்களும் சரி மகிழ்ச்சியில் உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் அமைப்பு செப்டம்பர் 1 ஆம் காலையில் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கை அரசுடன் நீண்ட காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 2.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பெயில்அவுட் நிதி அளிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரச் சரிவு மற்றும் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக நிதியுதவியைக் கேட்டு வந்த நிலையில் அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கைக்கு உதவும் வகையில் 48 மாத ஒப்பந்தம் மூலம் EEF Extended Fund Facility (EFF) கீழ் சுமார் 2.9 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஐஎம்எப் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளது.
வரி விதிப்பு
இந்த நிதியுதவியின் வாயிலாக இலங்கை அரசு விரைவில் வரி விதிப்பு முறைகளை மறுசீரமைப்புச் செய்ய உள்ளது. இதன் பிடி தனிநபர் வருமான வரி விதிப்பில் தற்போது இருக்கும் கட்டமைப்பை காட்டிலும் மிகவும் முற்போக்காகவும், கார்பரேட் வரி விதிப்பை விரிவாக்கவும், வாட் வரி விதிப்பை விரிவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கண்டிஷன் உடன் ஒப்பந்தம் இரு தரப்பு மத்தியிலும் கையெழுத்தாகியுள்ளது.
மக்கள் போராட்டம்
இலங்கையில் நடந்த மக்கள் போராட்டம் அந்நாட்டில் மட்டும் அல்லாமல் பல நாடுகளில் பயத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை, மேலும் பொருளாதாரச் சரிவில் இருக்கும் இலங்கை மக்கள் பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு அதிகளவில் செல்ல துவங்கியுள்ளனர்.
சிறு தொழில்கள்
இதேபோல் பல சிறு தொழில்கள் மூடப்பட்டு உள்ளதால் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் கோடிக் கணக்கான ஊழியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2.9 பில்லியன் டாலர் உதவி
இலங்கைக்குத் தற்போது பல நாடுகள் உதவி செய்து வரும் இதேவேளையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் வர்த்தகத்தைத் துவங்கவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டு வருகிறது. இந்த 2.9 பில்லியன் டாலர் உதவி மூலம் இலங்கை மக்களுக்கு அடிப்படைத் தேவைகளும், உதவிகளும் உறுதி செய்யப்படும்.