கடந்த வாரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸினை விட மிக அதிகமாக பேசப்பட்ட ஒரு பரப்பான ஒரு விஷயமெனில், அது டிக்டாக் உள்பட 59 சீன ஆப்களை இந்தியாவில் தடை செய்தது தான்.
டிக்டாக் என்ற ஒரு செயலியை இந்தியாவின் கடைக்கோடி கிராமம் முதல் இந்தியாவில் எல்லை வரை உள்ள அனைத்து நகரங்களிலும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டிதொட்டியெல்லாம் பரவிய ஒரு ஆப் தான் இது.
காலையில் எழுந்ததும் குட் மார்னிங் முதல் கொண்டு, இன்றைய ஸ்பெஷல் என்ன என்பது வரை, ஏன் ஒரு கட்டத்தில் ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல் நடனம், இசை, பாட்டு இப்படி தங்களுக்கு தெரிந்த திறமைகளை காட்டி வந்தனர் நம் மக்கள்.
பொழுதுபோக்குக்காக பயன்
ஒரு சிலர் இந்த ஆப்பினை வருவாய்க்காக பயன்படுத்தினாலும் முக்கால் வாசிக்கும் அதிகமாக இந்த ஆப்பினை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆக இந்த ஆப் தடையானது சீனாவுக்கு மிக பாதிப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ? நிச்சயம் இந்தியாவில் அதன் தாக்கம் இருந்தது எனலாம்.
இந்தியாவில் உருவாக்கலாம்
இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீல்கேனி இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில், டிக்டாக் போன்றதொரு செயலியை இந்தியாவில் உருவாக்குவது சாத்தியம் தான். உருவாக்குவது பிரச்சனை அல்ல. ஆனால் அதே போன்ற வணிக மாதிரியை பெறுவது பெரிய பிரச்சனையாகும். ஏனெனில் இன்னும் இந்தியா டிஜிட்டல் விளம்பர சந்தையாக மாறவில்லை.
டிஜிட்டல் விளம்பரம்
ஆனால் டிக்டாக் போன்ற சந்தைகள் டிக்டாக் போன்ற ஆப்கள் விளம்பரத்தினால் மட்டுமே தூண்டப்படுகின்றன. ஆக நாங்கள் நிச்சயம் இந்தியாவில் டிக்டாக் போன்றதொரு ஆப்பினை உருவாக்க முடியும். ஆனால் இங்குள்ள டிஜிட்டல் விளம்பர சவால்கள் சற்று கடினம். ஆக இந்த ஆப்களின் வருவாயை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விளம்பரங்களில் இருந்து வருவாய்
பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற ஆப்களின் முக்கிய வருவாய் விளம்பரங்களில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு டிக்டாக் உரிமையாளரான பைடான்ஸ் நிறுவனம் 17 பில்லியன் டாலர் வருவாயும், 3 பில்லியன் டாலர் லாபமும் கண்டது. இது முக்கியமாக அமெரிக்கா மற்றும் சீனாவில் என்றும் கூறியுள்ளார்.
இன்னும் டிஜிட்டல் சந்தையாக மாறவில்லை
ஆக இங்கு பிரச்சனை என்னவெனில் இந்தியா இன்னும் டிஜிட்டல் சந்தையாக மாறவில்லை. இந்தியா மிகப்பெரிய விளம்பர சந்தை அல்ல. டிவி மற்றும் பிரஸ் மற்றும் டிஜிட்டல் விளம்பரம் என்பது இந்தியா முழுவதுமே 10 - 12 பில்லியன் டாலர் தான். இதில் டிஜிட்டலி 2- 3 பில்லியன் டாலர்கள் மட்டும் தான் என்றும் நீல்கேனி தெரிவித்துள்ளார்.
பெரும் பயனர் தளம்
ஆக பெரும்பாலான தயாரிப்புகள் இந்தியாவில் பணம் சம்பாதிப்பதில்லை. அவை மூலோபாய காரணங்களுக்காக இங்கு இருக்கின்றனர். ஏனெனில் அவை பெரிய பயனர் தளத்தினை உருவாக்க விரும்புகின்றன. இந்த பயனர் தளமானது அவர்களுக்கு எதிர்காலத்தில் பயன்படலாம் என்றும் கூறியுள்ளார்.