இந்தியா சீனா எல்லை பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. ஒரு புறம் தனது படைகளை அதிகளவில் எல்லையில் குவித்து வருகின்றது.
ஏற்கனவே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் பலியான நிலையில், சீனா வேண்டாம், சீனா பொருட்கள் வேண்டாம் என்ற ஹேஷ்டேக்குகள் பரவலாக பரவி வந்தன.
இதற்கிடையில் இந்தியா அரசும் சீனாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள்
இது ஆரம்பத்தில் 59 சீனா செயலிகளை தடை செய்தது, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளை மிகவும் கடுமையாக்கியது. அரசின் திட்டங்களில் சீன நிறுவனங்கள் வேண்டாம் என தவிர்த்தது. பல பொருட்களுக்கான வரியினைக் கூட்டியது. இப்படி ஏராளமான நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சாத்தியமில்லை
ஆரம்பத்தில் இந்தியா சீனாவினை வேண்டாம் என நினைத்தால், அதன் பாதிப்பு இந்தியாவுக்கு தான். சீனாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் சீனாவின் உலகளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு சிறியது தான். இதனால் சீனாவுக்கு இது பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது. மாறாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்து பொருட்களினால் தான், இந்தியா இன்று உலகளவில் முன்னணி மருந்து பொருட்கள் ஏற்றுமதியாளாராக உள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி
அதோடு சோலார், எலக்ட்ரானிக் மெஷினரி மற்றும் உதிரி பாகங்கள், மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியினை சீனாவிடம் இருந்து தான் இந்தியா அதிகம் செய்கிறது. இதனை மற்ற நாடுகளில் இருந்து பெற முடியும் என்றாலும், சீனாவின் விலைக்கு வாங்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஆக இது யோசிக்க வேண்டிய விஷயமே.
வர்த்தக பற்றாக்குறை சரிவு
ஆனால் அதே நேரம் சில நிபுணர்கள் அத்தியாவசியம் தவிர, படிப்படியாக சீனாவின் சார்பினைக் குறைக்கலாம் என்றும் கூறினார். உண்மையில் அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது எனலாம். எப்படி எனில் இந்தியா - சீனா இடையேயான வர்த்தக பற்றாக்குறையானது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5.48 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
மொத்த வர்த்தகம்
இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 13.1 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல வர்த்தகமும் முதல் காலாண்டில் 16.55 பில்லியன் டாலராகவும், இதே முந்தைய ஆண்டில் இதே முதல் காலாண்டில் 21.42 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு இந்திய சீனா வர்த்தக சம நிலையை ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு
அதாவது இந்தியா சீனாவினை சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா சீனாவுக்கு 5.53 பில்லியன் டாலர் ஏற்றுமதியினை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 4.16 பில்லியன் டாலராக செய்திருந்தது. இது இரு நாடுகளும் கொரோனாவின் தாக்கத்தினால் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் வந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறையை குறைக்கலாம்
ஆக இந்தியாவின் அதிரடியான நடவடிக்கைகளானது கைகொடுத்துள்ளது என்றே கூறலாம். ஒரு புறம் இது வர்த்தக பற்றாக்குறையை குறைத்து சம நிலைக்கு கொண்டு வரவும், அதேசமயம் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கவும் பயன்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு இரு நாடுகளும் இந்த வர்த்தகத்தினை இரு தரப்பிலும் சீராக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.