Regional Comprehensive Economic Partnership (RCEP) என்று சொல்லப்படும் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா சேரப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறது.
இந்த பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கடந்த நவம்பர் 2012-ல் ஏஷியன் (ASEAN) தலைவர்கள் மற்றும் ஆறு நாட்டு தலைவர்கலாலும் கொண்டு வரப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் 10 ஏஷியன் நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளையும் கொண்டவை.
இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாததற்கு இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப் படவே இல்லை எனச் சொல்லி இருக்கிறது இந்திய தரப்பு. சீனா மற்றும் ஆசிய நாடுகளுடனான இந்த Regional Comprehensive Economic Partnership (RCEP) ஒப்பந்தத்தில் இருந்து வெளி வர இருக்கும் விஷயங்கள், நியாயம் அற்றதாகவும், சமநிலை அற்றதாகவும் இருப்பதாக இந்திய தரப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது.
பாங்காக்கில் நடந்த இந்த பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தக் கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி "இந்தியா எப்போதும் பிராந்திய ஒருங்கிணைப்புக்கும், சுமூகமான வர்த்தகத்துக்கும் துணை நின்று இருக்கிறது. இந்த பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்தியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. அதோடு, இந்தியா சமநிலைக்காகவும் வேலை பார்த்து இருக்கிறது" எனப் பேசினார்.
அதோடு "கடந்த ஏழு ஆண்டுகளில், பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் சார்ந்த பேச்சு வார்த்தைகளில், உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தக சூழல்கள் மாறுபட்டு இருக்கின்றன. இந்த மாற்றங்களை நாம் கண்டும் காணாமல் இருக்க முடியாது. தற்போது இருக்கும் இந்த பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் நிலை, இந்த ஒப்பந்தத்தை எதற்கு தொடங்கினார்களோ அதன் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இல்லை. அதோடு இந்த பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இந்தியாவின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இல்லை. எனவே இந்தியா இந்த பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இணைய முடியாது" எனச் சொல்லி இருக்கிறார் நம் பிரதமர் நரேந்திர மோடி.