தற்போது உலகிலேயே அதிவேகமாக வளரக் கூடிய ஆற்றலும், திறனும் கொண்ட நாடுகள் பட்டியலில், டாப் இரண்டு இடங்களில், சீனாவும், இந்தியாவும் தான் இருக்கின்றன.
சீனாவும், இந்தியாவும் ஒன்று சேர்ந்தால், மக்கள் தொகை அடிப்படையில், கிட்டத்தட்ட பாதி உலகமே ஒன்று சேர்ந்தார் போல ஆகிவிடும். ஆனால், அரசியல் காரணங்களாலும், சீனாவின் சர்வாதிகார போகினாலும், இந்த இரண்டு நாடுகளும் ஒன்று சேர்வது எல்லாம் கிட்டத்தட்ட நடக்காத காரியம்.
அது போக, கடந்த ஜூன் 2020-ல், சீனர்களின் தாக்குதலால், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள், வீர மரணம் அடைந்தார்கள். அது இந்தியா முழுக்க ஒரு விதமான உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சீன புறக்கணிப்பு உணர்வு
இந்த செய்தியைப் பார்த்த மக்கள், சீன புறக்கணிப்பு உணர்வை அதிகமாக வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். இந்திய மக்களைப் போலவே, இந்திய அரசும், சீனப் புறக்கணிப்பை வெளிப்படுத்தத் தொடங்கியது. இந்திய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை சீனாவுக்கு கொடுக்கமாட்டோம் என்றார்கள். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு கூடுதல் வரி விதித்தார்கள், 59 முக்கிய சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருக்கிறது. இப்படி பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சீனாவின் பதிலடி
சீனா மட்டும் என்ன சும்மா இருக்குமா? பதிலுக்கு, இந்தியாவில் இருந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிங்கிள் மோட் ஆப்டிக்கல் ஃபைபர்களுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டி டம்பிங் டியூட்டி வரி விதித்து இருக்கிறது. இந்திய கம்பெனிகளைப் பொருத்து 7.4 % முதல் 30.6 % வரை வரி விதித்து இருக்கிறது சீன அரசு.
ஏற்றுமதி கணக்கு
இப்படி இரண்டு நாடுகளும் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போதும், இந்தியா, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகரித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தியா, இந்த ஏப்ரல் - ஜூலை 2020-ல் 7.29 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறதாம்.
ஏற்றுமதி விவரங்கள் ஒப்பீடு
கடந்த ஏப்ரல் - ஜூலை 2019-ல், இந்தியா சீனாவுக்கு 5.57 பில்லியன் டாலர் அளவுக்கு தான் ஏற்றுமதி செய்து இருந்தார்களாம். ஆனால் இந்த ஏப்ரல் - ஜூலை 2020-ல் 7.29 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறார்களாம். ஆக சீனாவுக்கு, இந்தியா செய்யும் ஏற்றுமதி 30.8 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
ஒட்டு மொத்த நாட்டின் ஏற்றுமதி
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், கடந்த ஏப்ரல் - ஜூலை 2019 காலகட்டத்தில், ஒட்டு மொத்தமாக எல்லா நாடுகளுக்கும் 107.14 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்தது இந்தியா. இந்த ஏப்ரல் - ஜூலை 2020 காலத்தில், ஒட்டு மொத்தமாக எல்லா நாடுகளையும் சேர்த்து, 75.01 பில்லியன் டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து இருக்கிறார்களாம். ஆக இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி இந்த ஏப்ரல் - ஜூலை 2020 கால கட்டத்தில் சுமார் 29 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
2007 - 2008-க்குப் பிறகு
கடந்த 2007 - 08 கால கட்டத்துக்குப் பிறகு, இந்த 2020 -21 நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூலை கால கட்டத்தில் தான், சீனாவுக்கு, இந்தியாவின் ஏற்றுமதி இவ்வளவு அதிகரித்து இருக்கிறதாம். அதோடு இந்தியா ஏற்றுமதி செய்த மொத்த 75.01 பில்லியன் டாலரில், 9.7 சதவிகித ஏற்றுமதியை, சீனாவுக்கு மட்டுமே செய்து இருக்கிறது இந்தியா.
காரணம் எதுவும் இல்லை
இப்படி திடீரென சீனாவுக்கு மட்டும், ஏற்றுமதி அதிகரிப்பதற்கு, தனி காரணம் எதுவும் இல்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளச் செய்திகள். இந்த திடீர் ஏற்றுமதி உயர்வு, கொரோனா லாக் டவுன் தளர்வுக்குப் பின், அனுப்பிய பழைய ஆர்டர்களால் இருக்கலாம் எனவும் ஒரு சில செய்திகள் சொல்கின்றன. எது எப்படியோ, இந்தியா, சீனாவுக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.