உலகமெங்கிலும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அதற்கு காரணமே சீனா தான் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனினும் அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.
இதற்கிடையில் கொரோனாவால் முதன் முதலாக பாதிக்கப்பட்டதில் இருந்தே, பல நாட்டு நிறுவனங்களும் தங்களது விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சீனாவினை விட்டு வெளியே வரத் துடிக்கின்றன.
அப்படி சீனா வேண்டாம் என வெளியேற துடிக்கும் நிறுவனங்களில் பல இந்தியாவினை தேர்தெடுக்கின்றன. ஏன்? என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.
இதுவும் ஒரு காரணம்
ஒரு புறம் கொரோனாவுக்கு காரணம் சீனா தான் என, சீனா மீதான அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதோடு சீனாவில் 2017-ம் ஆண்டில் இயற்றப்பட்ட தேசிய புலனாய்வு சட்டம், சீனாவை தளமாகக் கொண்ட அல்லது சீன உரிமையின் கீழ் உள்ள அனைத்து தொழில் நுட்ப நிறுவனங்களையும் நிர்வகிக்கிறது. ஆக இந்த சட்டமானது சீனா அரசாங்கம் கேட்கக்கூடிய எந்தவொரு தகவல்களையும், பகிர்ந்து கொள்ள அனைத்து வணிகங்களையும் கட்டாயப்படுத்துகின்றது.
இந்தியா கவர்ச்சிகரமான நாடு
இதற்கிடையில் சீனா வேண்டாம் என, சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு, இந்தியா தான் கவர்ச்சிகரமான நாடு என்று இங்கிலாந்து இந்திய வர்த்தக கவுன்சில் தெரிவித்துள்ளது. பிடிஐ-க்கு பேட்டியளித்துள்ள இங்கிலாந்து இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயந்த் கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா வணிக வளர்ச்சியில் எதிர்பார்ப்பு
இரு நாடுகளும் கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து வெளி வருவதால், இங்கிலாந்து இந்தியா வர்த்தகத்தில் வளர்ச்சியைக் காண எதிர்பார்ப்பதாகக் கூறினார். மேலும் இங்கிலாந்து வணிகங்கள், இந்தியாவின் ஆத்ம நிர்பார் திட்டத்தில் வணிகம் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.
வணிக மதிப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வணிகம், கடந்த 2019 - 2020ம் ஆண்டில் 15.5 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 16.87 பில்லியன் டாலராக இருந்துள்ளது. சீனாவுக்கு மாற்றாக உற்பத்தி விநியோக சங்கிலி சாத்தியங்களை ஆராய, உலகளாவிய வணிக உணர்வுகளிலிருந்து வெளி வரும் வாய்ப்புகளை இங்கிலாந்து மற்றும் இந்தியா பார்க்க தொடங்கியுள்ளன என்று கிருஷ்ணா என்று கூறியுள்ளார்.
இந்தியா தான் உகந்த நாடு
இங்கிலாந்து தொழில்கள் இந்தியாவில் பல துறைகளில் நீண்ட முதலீடுகளைக் கொண்டுள்ளன. உலகளாவிய விநியோக சங்கிலிகளுக்கான மாற்று இடங்களை ஆராய விரும்பும் வணிகங்களுக்கான நாடு இந்தியா என்றும் கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து வணிகங்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அதிகரிக்கும் தளமாக இந்தியாவைப் பார்க்கும் என்றும் யுகேஐபிசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பல தேவைகள்
இந்தியாவின் தேவைகளுக்கும், இங்கிலாந்தின் சலுகைகளுக்கும் இடையில் பெரும் தேவைகள் உள்ளன. குறிப்பாக உற்பத்தி, உள்கட்டமைப்பு, எரிசக்தி, மருத்துவம், மருந்தகம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற பல துறைகள் உள்ளன. 2021ம் ஆண்டில் இங்கிலாந்து உலகத்துடன் ஒரு புதிய வர்த்தக உறவை உருவாக்கியுள்ள நிலையில், இந்தியாவும் தன்மை ஒரு முக்கிய வீரராக நிலை நிறுத்தியுள்ளது.