டெல்லி: இந்தியாவின் சுங்க துறையானது ஸ்மார்ட்போன், வீட்டு உபயோக பொருட்கள், செட் அப் பாக்ஸ், எலக்ட்ரானிக் கேமராக்கள், மற்றும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியினை வரும் செப்டம்பர் 21லிருந்து உன்னிப்பாக கவனிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தாரள வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களினை சரிப்பார்க்க, புதிய வழிகாட்டுதல்களையும் அமல்படுத்த உள்ளது.
இந்த விதிகள் இந்தியாவின் தாரள வர்த்தக கொள்கையினை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்க்கும் நோக்கத்தில், கெடுபிடிகளை அதிகரித்து வருவதாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
சரி அப்படி என்ன தான் விதிகளை கடுமையாக்கியுள்ளது? எந்தப் பொருளாக இருந்தாலும், அது எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டும் என இந்தியா கூறியுள்ளது. அதேசமயம் சீனாவில் தயாரிக்கப்படும் சில பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மீறியும், மற்ற நாடுகள் மூலமாகவும், சீனா தன் பொருட்களை இந்தியாவில் குவித்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
உள்நாட்டு பொருட்கள் விற்பனை பாதிப்பு
இதை தடுக்கும் வகையில் தான் சந்தையில் விற்கப்படும் பொருட்களில் அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தான், 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், தாராள வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் மதிக்கிறோம். அதை நேரத்தில், சீனா தன் பொருட்களை இந்தியாவில் குவிப்பதை ஏற்க முடியாது. தரமற்ற, மிகவும் குறைந்த விலையுள்ள பொருட்கள் குவிக்கப்படுவதால், உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.
ஆசியான் நாடுகளும் கடைபிடிக்க வேண்டும்
ஆக இதன் பின்னரே இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது இந்திய அரசு. ஆசியான் நாடுகளும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோயல் அப்போது பேசியிருந்தார். மேலும் ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அது இரு தரப்புக்கும் பலனளிப்பதாக இந்த ஒப்பந்தம் இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்தியாவின் கவலை
இந்தியாவின் ஏற்றுமதியானது குறைந்துள்ள இந்த நேரத்தில், இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதனால் வர்த்தக பற்றாக் குறையானது பெரியளவில் அதிகரித்துள்ளது. ஆசியான் நாடுகளை பொறுத்தவரையில் 2010ல் தாராள வர்த்தக ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட பின், வர்த்தக பற்றாக்குறை 5 பில்லியன் டாலர்களில் இருந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தற்போது 22 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு
இந்த வர்த்தக பற்றாக்குறையானது கவலையளிக்கும் ஒரு காரணியாகவே உள்ளது என இதனையறிந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 3 - 4 ஆண்டுகளில் வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உடனான வர்த்தக பற்றாக்குறையானது தலைகீழாக மாறியுள்ளது. அதே போல் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன
உண்மையில் இந்த நாடுகள் இந்தியாவுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதிகள் ஆரம்பித்துள்ளது. தாய்லாந்து மற்றும் மலேசியாவும் கூட எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்து வருகின்றன. இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் சுங்கத் துறை, 1,200 கோடி மதிப்பிலான எஃப் டி ஏ மோசடிகளை கண்டறிந்துள்ளதாகவும் இதனையறிந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
ஆக அரசின் இந்த நடவடிக்கையால் இறக்குமதிகள் குறையலாம். இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இதனால் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். வர்த்தக பற்றாக்குறையும் அதிகரிக்கும். நிச்சயம் சீனாவுக்கும் இது சரியான பதிலடியாகவும் இருக்கும்.