இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்குச் சரியான சிகிச்சை அளிக்க முடியாத நிலை நாடு முழுவதும் உள்ளது. குறிப்பாக மருத்துவமனையில் போதிய படுகையும், மருந்தும், ஆக்சிஜனும் இல்லாமல் இருக்கும் காரணத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவுக்கு உதவி செய்யும் வகையில் அமெரிக்க அரசிடம் பூட்டி வைத்திருக்கும் வேக்சினை அளிக்கக் கோரிக்கை முன்வைத்த அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ், தற்போது முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ்
அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல உதவிகளை இந்தியாவுக்குச் செய்து வரும் நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இப்படி என்ன சொல்லியுள்ளது..? ஏன் சொல்லியுள்ளது..?
6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக
உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில் தற்போது ஏற்பட்டு உள்ள கொரோனா தொற்றும், அதன் மூலம் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பு இந்தியாவை மட்டும் அல்லாமல் சர்வதேச பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது என்று அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ் எச்சரித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள்
அமெரிக்காவின் பல ஆயிரம் நிறுவனங்கள் தங்களது பேக் ஆபீஸ் ஆப்ரேஷன்ஸ் (Back-office operations) அனைத்தையும் இந்திய ஊழியர்களை வைத்து நிர்வாகம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா பாதிப்பு இந்திய ஊழியர்களைப் பாதிப்பது மூலம் அமெரிக்க நிறுவனங்களையும் பாதிக்கும் எனச் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகத் துறை தலைவர் Myron Brilliant தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நிலை
இந்தியாவில் கொரோனா தொற்று நிலை தற்போதைய அளவை விடவும் மோசமான நிலையை அடைந்து தான் இயல்பு நிலைக்குத் திரும்பும், இது மூலம் இந்திய பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என Myron Brilliant தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம்
இந்தியாவின் ஏற்பட்டு உள்ள கொரோனா தொற்று ஏற்கனவே இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில், இனி வரும் காலத்தில் இந்திய பொருளாதாரச் சரிவால் அமெரிக்கப் பொருளாதாரமும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.
40 சிஇஓக்கள் அடங்கிய குழு
இந்தச் சூழ்நிலையில் தான் இந்தியாவிற்கு உதவும் வகையிலும், இதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ்-ன் அமெரிக்கா - இந்தியா பிஸ்னஸ் கவுன்சில் பரிவு தலைமையில், Partnership Forum மற்றும் Business Roundtable ஆகிய அமைப்புகளுடன் கூட்டணி சேர்ந்து இந்த 40 சிஇஓக்கள் அடங்கிய குழு இந்தியாவிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு உதவும் அமெரிக்கா
40 சிஇஓ-க்கள் அடங்கிய இக்குழு முதல் கட்டமாக 20,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்ஸ்-ஐ அடுத்தச் சில வாரத்தில் இந்தியாவிற்குக் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளதாக Deloitte சிஇஓ புனித் ரென்ஜன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 10 லிட்டர் மற்றும் 45 லிட்டர் அளவு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பத் திட்டமிட்டு உள்ளோம் எனவும் புனித் ரென்ஜன் தெரிவித்துள்ளார்.
குளோபல் டாஸ்க் போர்ஸ்
கொரோனா மோசமாகப் பாதித்துள்ள இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட இக்குழு Global Task Force on Pandemic Response: Mobilizing for India எனப் பெயரிட்டுள்ளது. முதல் முறையாக ஒரு தனி நாட்டிற்கு உதவும் வகையில் ஒரு குளோபல் டாஸ்க் போர்ஸ் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு உள்ளது.