இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஏழை மாநிலங்களில் ஒன்றான பீகார்-ல் வருகிற ஜூலை 6ஆம் தேதி காலியாக உள்ள 9 இடங்களுக்குத் தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகளும் அதேநாளில் வெளியிடத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதேபோல் நடப்பு ஆட்சியின் 5 ஆண்டுக் காலம் வருகிற நவம்பர் மாதம் முடிவடையும் நிலையில் அக்டோபர் மாதம் இம்மாநிலத்தில் பொதுத் தேர்தலும் நடக்க உள்ளது. இதனால் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் பீகார் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பீகார் மாநிலத்தின் வேலைவாய்ப்பு குறித்து முக்கியமான ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதை எப்படி ஆளும் கட்சி கையாளப் போகிறது என்பது தான் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.
கொரோனா-விற்ரு முன்பு நாட்டின் பொருளாதாரமும், வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவீடு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
பீகார் வேலைவாய்ப்பின்மை அளவீடு
பீகார் மாநில பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இம்மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவீடு பற்றிச் செய்தி முக்கியப் பேசுபொருளாக அமைந்துள்ளது. ஜூன் 2019 உடன் முடிந்த ஆண்டில் பீகாரின் வேலைவாய்ப்பின்மை நாட்டின் சராசரி வேலைவாய்ப்பின்மை அளவை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த அளவீடு அனைத்தும் கொரோனா பாதிப்பிற்கு முந்தைய அளவீடாகும்.
இந்தியா Vs பீகார்
அரசு தரவுகளின் படி ஜூன் 2019 உடன் முடிந்த காலத்தில் இந்தியாவின் சராசரி வேலைவாய்ப்பின்மை அளவீடு 5.8 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அளவீடு ஒரு வருடத்தில் 3 சதவீதம் அதிகரித்து 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கிட்டதட்ட ஒட்டுமொத்த இந்தியாவின் சராசரி அளவீட்டை விடவும் பீகார் மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை 2 மடங்கு அதிகமாக உள்ளது.
தேர்தல்
இந்தியாவை விட இரண்டு மடங்கு அதிக வேலைவாய்ப்பின்மை பீகாரில் இருக்கும் நிலையில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதுவும் கொரோனா வந்த பின்பு பல லட்ச பீகார் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் இருக்கும் பீகார் மக்கள் தற்போது கொரோனா எதிரொலியாகப் பீகாருக்குத் திரும்பியுள்ளனர். இதனால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதீஷ் குமார்
பல்வேறு போராட்டங்கள், ஆட்சி களைப்புக்குப் பின் BJP கூட்டணியில் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ் குமார் இருந்து வருகிறார். 29 நவம்பர் 2020ஆம் தேதி நிதீஷ் குமார் அவர்களின் ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் பொதுத் தேர்தலுக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற தேர்தலிலும் பிஜேபி மற்றும் நிதீஷ் குமார்-ன் ஜனதா தல் கட்சியும் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளையும் அமித் ஷா துவங்கியுள்ளார்.
பீகார்
பீகார் பொருளாதாரம் அதிகளவில் விவசாயத்தைச் சார்ந்து உள்ளது, மேலும் குறைந்த வருமானம் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் மட்டுமே இருப்பதால் அதிகளவிலான மக்கள் இடம்பெயர்ந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்காகச் செல்கின்றனர்.
இந்தியாவிலேயே வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பது பீகாரில் தான் என CMIE அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது. ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற சின்ன சின்ன மாநிலங்களை விடவும் அதிக வேலைவாய்ப்பின்மை பீகாரில் இருப்பதாக CMIE ஆய்வுகள் கூறுகிறது.