அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளுடனான சீனா-வின் நட்புறவு பல காரணங்களுக்காகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் இருக்கும் பல வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தை இந்தியாவிற்கு மாற்றியது.
இந்த வாய்ப்பை பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்ட மத்திய அரசு, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவிற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது.
இதற்கு ஏதுவாக இந்தியாவில் புதிய தொழிற்துறை அமைக்கும் முயற்சியில் உலக நாடுகளுக்குப் பெரிய அளவில் பொம்மைகளை ஏற்றுமதி செய்யும் சீனாவின் வர்த்தகத்தை இந்தியா கைப்பற்றத் திட்டமிட்டு புதிய பொம்மை உற்பத்தி தளத்தை அமைத்துள்ளது.
பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குப் பின் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையை மீட்டு எடுக்க #VocalForLocal என்ற கொள்கை மிகப்பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாகவே இந்தியாவில் முதல் முறையாகப் பொம்மை உற்பத்திக்கெனப் பிரத்தியேக தளத்தை உருவாக்க முடிவு செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறப்புப் பொருளாதாரப் பகுதியைக் கர்நாடக மாநிலத்தின் கோப்பாலா என்ற பகுதியில் அமைய உள்ளதாக அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கோப்பாலா
கர்நாடக மாநிலத்தில் அமைய இருக்கும் பொம்மை உற்பத்தி தளம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள நிலையில், இத்திட்டத்திற்காகச் சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இப்பகுதியை டாப் கிளாஸ் உள்கட்டுமான அமைப்பை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்து அமைக்கப்படும் இந்தப் புதிய சிறப்புப் பொருளாதாரப் பகுதியின் மூலம் அடுத்த 5 வருடத்தில் புதிதாக 40,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இப்புதிய திட்டத்தைப் பிரதமர் மோடி "Mann Ki Baat" நிகழ்ச்சியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி
இப்பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் பொம்மைகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அதிநவீன முறையிலும் உயர் தரத்தில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலை மூலம் இந்தியாவில் 2023ஆம் ஆண்டுக்குள் சுமார் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையை உருவாக்க முடியும் என்றும், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 சதவீதம் வளர்ச்சியை அடையவும் முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
7 லட்சம் கோடி ரூபாய்
உலகப் பொம்மை வர்த்தகச் சந்தை சுமார் 7 லட்சம் கோடி ரூபாய், இதில் இந்தியா தற்போது கணிக்கப்பட்டுள்ள சந்தை மதிப்பு மிகவும் குறைவு என்பதால் இத்துறை வளர்ச்சி அடைவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications