இந்தியாவின் ஜிடிபி விகிதம் நடப்பு ஆண்டில் 3.1 சதவீதம் குறையலாம் என்று மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.
இது கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனால், கிட்டதட்ட மூன்று மாதங்கள் நாடு முழுவதும் லாக்டவும் செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
அதோடு இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க பல நாடுகளிலும், இதே நிலை தான் என்பதால் உலகப் பொருளாதாரமும் அடி வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உற்பத்தி பாதிப்பு
ஏனெனில் உலகம் முழுக்க கொரோனா பாதிப்பின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு தேவையும் குறைந்துள்ளது. ஆனால் தற்போது தேவை அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவாக உள்ளது. ஆக அது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதும் தெரியவில்லை. மேலும் நாட்டில் விநியோக சங்கிலியும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மூலதன பொருட்கள் கிடைக்காமை
இதன் காரணமாக உற்பத்தி செய்ய சரியான மூலதன பொருட்கள் கிடைக்காமை, அப்படியே மூலப் பொருட்கள் கிடைத்தாலும் விலை அதிகம். இப்படி தொழில் துறைகளானது தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இது மட்டும் அல்ல, எல்லாமே கிடைத்தாலும், தற்போது புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில் ஆள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
வளர்ச்சி எவ்வளவு?
எனினும் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வு மற்றும் அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளினால், சரிந்து வரும் பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த 2021ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக வளர்ச்சி காணும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகப் போரின் போது ஏற்பட்ட சரிவு
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வரலாற்றில் 2ம் உலகப் போரின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவினை போல் காணக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது இந்த நிறுவனம். ஆக இது ஒரு மோசமான ஆண்டாக மாறக்கூடும். ஆக மொத்தத்தில் 2020ம் ஆண்டில் ஜி 20 நாடுகள் 2020ம் ஆண்டில் பொருளாதாரம் 4.6 சதவீதம் சுருங்கி, 2021ல் 5.2 சதவீதமாக வளர்ச்சி காணக் கூடும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
கணக்கில் சீனா இந்தியா எல்லை பதற்றமும் அடங்கும்
இதே ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் 2020ம் ஆண்டில் பொருளாதாரம் 1 சதவீதம் வளர்ச்சி காண கூடும். இதே 2021ல் 7.1 சதவீதமாக வளர்ச்சி காணக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இந்த அறிக்கையில் சீனா இந்தியா இடையே நடந்து வரும் எல்லை பதற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.