டெல்லி: இந்தியாவின் இரும்பு ஏற்றுமதியானது ஏப்ரல் முதல் ஜூலை காலத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது குறைந்தபட்சம் ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சனைக்கு மத்தியில், இந்த வர்த்தகமானது நடந்துள்ளது.
இது குறித்து விற்பனையாளர்கள் கொரோனாவின் தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து விடுபடவும், வருமானத்தினை ஈட்டவும் முயன்றதால், குறைந்த விலையுள்ள இரும்பினை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுவே வர்த்தகம் மேம்பட வழிவகுத்ததாகவும் வர்த்தகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இந்த விற்பனையானது வர்த்தக விதிகளை மீறியதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் இதனை சீனா அயர்ன் மற்றும் ஸ்டீல் அசோசியேஷன் கண்காணித்து வருவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களான டாடா ஸ்டீல், ஜே எஸ்டபள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் 4.64 மில்லியன் டன் இரும்பினை விற்பனை செய்துள்ளன. இதே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 1.93 மில்லியன் டன் மட்டுமே அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 4.64 மில்லியன் டன்களில், சீனா மற்றும் வியட்னாமுக்கு முறையே 1.37 மற்றும் 1.3 டன் கள் அனுப்பபட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இது கடந்த 2015 - 2016ம் நிதியாண்டோடு ஒப்பிடும்போது, சீனாவின் கொள்முதல் மிக அதிகமாகும்.
வியட்னாம் இந்தியாவிடம் தொடர்ச்சியாக ஸ்டீல் வாங்கும் ஒரு இறக்குமதியாளராகும். ஆனால் தற்போது அதனையெல்லாம் வீழ்த்தி சீனா முன்னணியில் இருப்பது ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. அதிலும் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சனைக்கு மத்தியில் இது என்னவென்று சொல்வது. இந்தியாவின் பாரம்பரிய சந்தைகளான இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்றவற்றையும் விட தற்போது சீனா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா சீனா இடையேயான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, இரு நாட்டு வீரர்கள் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பின்னர் இந்தியா சீனா இந்தியாவில் முதலீடு செய்வதை கட்டுப்படுத்தும் விதமாக எஃப்டிஐ விதிகளை மிக கடுமையாக்கியது. இது மட்டும் அல்ல, சீனாவுக்கு எதிராக இன்னும் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் இப்படி ஒரு நிலையிலும் கூட இந்தியா சீனா இடையேயான ஸ்டீல் வர்த்தகம் மேம்பட்டுள்ளது நிச்சயம் ஆச்சர்யபட வைக்கும் ஒரு விஷயமாகத் தான் உள்ளது.