ஐடி ஊழியர்கள் சமீபத்திய காலமாக பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் விசா மூலம் பணியாற்றி வந்த ஊழியர்கள் கட்டாயம் 60 நாட்களுக்குள் புதிய பணியினை தேடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து, 2 லட்சம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் மிக பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.
திறமையான ஊழியர்கள்
அமெரிக்காவில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஐடி ஊழியர்களில் 30 - 40% பேர், இந்திய ஐடி ஊழியர்கள் ஆவர். இதில் பலரும் ஹெச் 1 பி விசா மற்றும் எல் 1 விசா வைத்துள்ளவர்களாவர்.
ஹெச் 1 பி விசா அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கிறது. இது குறிப்பிட்ட வகையான திறமையான ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. ஹெச் 1 பி விசா மூலம் அதிகம் பணியமர்த்தப்படுபவர்களில் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அடங்குவர். குறிப்பாக இந்திய ஊழியர்கள் அதிகம் எனலாம்.
கடைசி வேலை நாள்
இதே எல் 1ஏ மற்றும் எல் 1பி விசா மூலம் ஊழியர்கள், சிறப்பு திறன் வாய்ந்தவர்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. முன்னதாக கீதா என்ற பணியாளர் மூன்று மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா வந்ததாகவும், ஆனால் மார்ச் 20 இவரின் கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய வேலை பெற வேண்டிய கட்டாயம்
ஆக 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் கூறுகின்றார். கீதா போன்ற பற்பல இந்திய ஊழியர்களும் குறுகிய காலத்தில் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படி புதிய வேலை கிடைக்காவிடில் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனலாம்.
மைக்ரோசாப்ட் ஊழியர்
இதே மைக்ரோசாப்ட்-ல் இருந்து பணியாற்றிய மற்றொரு ஊழியர், ஜனவரி 18ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும். அவர் சிங்கிள் மதர் என்றும், தனது மகன் உயர்கல்வி முடித்து காலேஜ் செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது மிக கடினமான காலம் என்றும் கூறியுள்ளார்.
60 நாட்கள் தான் இருக்கு
இதுபோன்ற ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் பணி நீக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது மட்டும் பிரச்சனை அல்ல, 60 நாட்களில் புதிய வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படி புதிய வேலை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது ஊழியர்கள் மட்டும் அல்லாது, அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தினரையும் பாதிக்கும்.
குழந்தைகளும் பாதிப்பு
பல ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி படித்து வரும் நிலையில், அவர்களின் கல்வியும் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஐடி துறையிலும் இந்தியர்கள் தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் தான் அதிகளவில் இந்தியர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் பணியாற்ற ஆர்வம்
எனினும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஊழியர்கள் அமெரிக்காவிலேயே பணியாற்ற விரும்புகின்றனராம். இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், இந்தியர்கள் என பலரும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பினை உருவாக்கி, அதன் மூலம் எங்கு எல்லாம் வேலை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனவு மாறவில்லை
இந்த பிரச்சனைக்கு மத்தியில் புதிய விசாக்கள் நடைமுறை தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் ஐடி துறையினரின் அமெரிக்க கனவு மட்டும் மாறவில்லை எனலாம்.