நாட்டில் கொரோனாவால் எந்த துறை தான் பாதிக்கப்படாமல் உள்ளது என்று பார்த்தால், அதனை சொல்வது மிகக் கடினம். ஏனெனில் எந்த துறையினையும் இந்த கொடிய கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன் விட்டு வைக்கவில்லை எனலாம்.
இப்படி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்று இந்திய ஃபேஷன் துறையும் ஒன்று. ஏனெனில் கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கே கூட கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது.
இன்னும் பலர் தங்களது வேலைகளை இழந்து வீட்டில் இருந்து வருகின்றனர். சிலருக்கு சம்பள குறைப்பு இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளினால் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கடைகள் இயங்கவில்லை
இந்த நிலையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவையினை மட்டுமே, பூர்த்தி செய்து கொள்ளும் குடும்பங்கள் இங்கு எவ்வளவோ உண்டு. இதற்கிடையில் தேவையே இருந்தாலும் அதனை வாங்க முடியாத நிலையும் பல பகுதிகளில் உண்டு. ஏனெனில் அதிகரித்து வரும் கொரோனா வரும் தாக்கத்தின் மத்தியில், பல பகுதிகளில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியம் தவிர வேறு இயங்க அனுமதிக்கப்படவில்லை.
எதிர்காலம் என்னவாகும்?
இதன் காரணமாக சில்லறை பேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக் கணக்கான ஊழியர்கள் தங்களது பணியினை இழந்துள்ள நிலையில், ஃபேஷன் துறையின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும் வரும் காலத்தில் பேஷன் துறையில் தேவையினை பொறுத்தே இத்துறையின் எதிர்காலம் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பேஷன் துறையில் தாக்கம்
கொரோனா நெருக்கடி பேஷன் துறையில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இது நிதி இலக்குகளை நிவர்த்தி செய்யும் விதமாகவோ அல்லது புதிய ஆடை அணியும் விதத்தினை பொறுத்தே அமைந்துள்ளது. சில ஆடை வடிவமைப்பாளர்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான ஆடைகளை உருவாக்க பல முயற்சிகள் எடுத்து வந்தாலும், நாம் தற்போது செய்ய வேண்டிய விஷயம் காத்திருப்பது மட்டும் தான்.
ஆடை ஆணியும் பாணியே மாறும்
ஏனெனில் பேஷன் வரலாற்றாசிரியர்கள் 1918க்கு பிறகு காய்ச்சல் தொற்று, பெரும் பொருளாதார மந்த நிலை மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு தங்களது ஆடை அணியும் பாணியை மாற்றியதாக சுட்டிக் காட்டுகின்றன. ஆக லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிக் கொண்டு இருக்கும் கொரோனா என்னும் கொடிய தொற்று நோயும் இதற்கு விதிவிலக்கல்ல.
பெரும் பின்னடைவு
கொரோனாவால் பெரும் அழுத்தத்தில் உள்ள மக்கள், தங்களது அலங்காரத்தினை பெரிதும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. அதோடு நிலவி வரும் மோசமான நிலையும் இதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பணமதிப்பிழப்புக்கு பிறகு பெரும் பின்னடைவை சந்தித்திருந்த இந்த துறையானது, தற்போது தேவை குறைவால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் இன்னும் பெருத்த அடி வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் மீண்டும் பழைய பாணிக்கு மாறுவார்கள்
எனினும் இது எங்களுக்கு பெரிய அளவில் தெரியபோவதில்லை, ஏனெனில் ஃபேஷன் துறை ஏற்கனவே பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸினை வெல்ல மக்கள் மீண்டும் சேலைகள், குர்தா மற்றும் குர்திகளுக்கு மீண்டும் மாறுவார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
பராமரிப்பு செலவு குறைவு
ஏனெனில் சேலை என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் சேலை பொருந்தும். இதற்கு பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது.
ஆண்கள் பொதுவாக பிராண்டட் சட்டைகள் மற்றும் கால்சட்டைகளுக்காக செலவிடுவார்கள். ஆனால் இனி பாரம்பரிய உடைகளை நோக்கி நகரலாம் என்றும், இதுவே அவர்களது விருப்பமான தேர்வாக இருக்கும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
கைவினைஞர்கள் வேலை இழப்பு
இந்திய ஜவுளித் தொழிலில் 16 மில்லியன் கைவினைஞர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்கள் நெசவு, எம்பிராய்டரி மற்றும் அலங்கார நகைகளை உருவாக்குதல் போன்ற சிக்கலான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த கைவினைஞர்களில் பெரும்பாலோர் ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்த தலைமுறைக்கு அதனை எடுத்து செல்கின்றனர். ஆனால் இந்த கண்ணுக்கு தெரியாத அரக்கனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால், இன்று ஆயிரணக்கனக்கான கைவினைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.
விற்பனை அதிகரிக்கவில்லை
ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்பனை அதிகரிப்பு இருந்த போதிலும், ஆடைகள் வாங்க கடைகள் மற்றும் மால்கள் இருந்தபோதிலும், அங்கு நுழைய வாடிக்கையாளர்கள் இன்னும் தயங்குகிறார்கள். ஆக இதன் பாதிப்பு சில்லறை வர்த்தக நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களில் இருந்து, புலம் பெயர் தொழிலாளர்கள் வரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆக இதன் இழப்புகளை கணக்கிட இயலாது.
ஆடை வடிவமைப்பு எளிதாக்கப்படலாம்
இதே தொற்று நோய்க்கு பின்னர் கைவினை பொருட்கள், கிராப்ட்கள் என பலவும் மாறும். நான் ஆடைகளை எளிதாக்குவேன். செலவுகளை குறைப்பேன். அது மக்களுக்கு தகுந்தாற்போல் இருக்கும் என்றும் கைவினை நிபுணர் ஒருவர் கூறுகிறார். இன்றைய காலகட்டத்தில் பேஷன் துறையில் ஆடைகளுக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது நகைகள் தான்.
நகைத்துறை
ஆனால் இன்றோ அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படும் மக்கள் ஆடம்பரத்திற்காக பயன்படுத்தப்படும், ஆடைக்கு ஏற்ப விதவிதமாக அணியும் நகைகள், இனி கொரோனாவிற்கு முன்பு போல் இருக்குமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களில் ஆவது, இது மீண்டு வரும் என்பதே இவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனினும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில், இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.