இந்தியாவின் மிகப்பெரிய டெக் சிட்டியான பெங்களூருவினைக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், நடப்பு ஆண்டில் 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில கல்வித் துறை அமைச்சர் டாக்டர் அஸ்வத் நாரயணா தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடுகள் எந்தெந்த துறைகளில் செய்யப்படவுள்ளது? மற்ற முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எங்கு முதலீடு?
ஏற்கனவே டெக் நகரமாக இருந்து வரும் பெங்களூரிவினை சுற்றி மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பெருகி வருகின்றது. இந்த நிலையில் கர்நாடக அமைச்சரின் அறிவிப்பானது மேற்கொண்டு இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே உள்ளது. தற்போது செயப்படவுள்ளதாக கூறப்படும் முதலீடானது பயோடெக் மற்றும் ஸ்டார்ட் அப் போன்ற துறைகளில் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு முதலீடு
இதன் மூலம் மேற்கண்ட துறையில் 75,000 கோடி ரூபாய் முதலீடுகள் செயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் சென்ற அமைச்சர்கள், டாவோஸ் கூட்டம் மிக வெற்றிகரமான நடந்ததாக தெரிவித்துள்ளார். முதலீடுகள் குறித்தான ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
கர்நாடகாவின் மெகா திட்டம்
கர்நாடகா மைசூர், மங்களூரு, பெல்காம், ஹூப்ளி - தர்வாட் மற்றும் ஷிமோகா போன்ற நகரங்களை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துவதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மாநில அரசு மாநிலம் முழுவதிலும் ஏழு முதல் எட்டு விமான நிலையங்களை உருவாக்கி வருகின்றது.
ரூ.52,000 மதிப்பிலான ஒப்பந்தம்
டாவோஸ் கூட்டத்திலும் கர்நாடகா அரசு 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு மிகப்பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு பெரிய நிறுவனங்களுடன் அரசு கைகோர்த்துள்ளது. இதில் ரினியூவபிள் நிறுவனம் 50,000 கோடி ரூபாயும், லுலு குழுமம் 2000 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளது. இது தவிர சீமென்ஸ் நிறுவனமும் பெங்களூரில் மேற்கோண்டு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பல துறைகளில் வளர்ச்சி
மருத்துவ உபகரணங்களுக்கான உற்பத்தி பிரிவை நிறுவ கர்நாடக அரசு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. பெங்களூரு தகவல் தொழில் நுட்பம் தவிர, விண்வெளி பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் தற்போது வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. நாங்கள் போட்டித் தன்மையுடன் இருக்க விரும்புகிறோம். ஆக அனைவரையும் வரவேற்கிறோம் என நாரயணா தெரிவித்துள்ளார்.