இந்திய மென்பொருள் துறையின் தலைமையிடமாக இருக்கும் கர்நாடக மாநிலத்தில் ஐடி மற்றும் அதனைச் சார்ந்துள்ள துறைகளை மட்டும் குறிவைத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு கர்நாடக மாநில அரசு பிரத்தியேகமாக ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஐடி துறையைச் சார்ந்து இருப்பதால் ஐடித்துறை வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தனித் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
10 லட்சம் வேலைவாய்ப்புகள்
2025ஆம் ஆண்டுக்குள் கர்நாடகாவில் ஐடி மற்றும் அதைச் சார்ந்துள்ள துறைகளில் புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளையும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிட்டு உள்ளது இம்மாநில அரசு. இதற்காகக் கர்நாடக டிஜிட்டல் எக்னாமி மிஷன் என்ற புதிய மற்றும் சிறப்புத் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளதாகக் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டாக்டர் சிஎன் அஷ்வத் நாராயன் தெரிவித்துள்ளார்.
300 பில்லியன் டாலர்
இந்தத் திட்டத்தின் மூலம் 2025க்குள் ஐடி துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் ஐடித்துறையின் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சுமார் 150 பில்லியன் டாலருக்கும், ஐடி துறையின் மொத்த மதிப்பீட்டை 300 பில்லியன் டாலர் அளவிற்கும் உயர்த்தும் இலக்குடன் திட்டமிட்டு கர்நாடக டிஜிட்டல் எக்னாமி மிஷன் உருவாக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார் அஷ்வத் நாராயன்.
கிராமம் மற்றும் நகரங்கள் இடைவேளை
இதோடு மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாகக் கிராமம் பகுதிகளுக்குத் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்தவும், மின்சாரம் தடையில்லாமல் அளிக்கவும் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்குமான இடைவேளையைக் குறைக்கும் வகையிலும், டிஜிட்டல் எக்னாமி-ஐ மேம்படுத்தவும் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளதாகவும் அஷ்வத் நாராயன் தெரிவித்துள்ளார்.
ஐடி துறை ஆதிக்கம்
கர்நாடக மாநிலத்தின் GSDP அளவீட்டில் சுமார் 25 சதவீதம் ஐடி துறையைச் சார்ந்து உள்ளது. இந்த 25 சதவீதத்தில் 98 சதவீதம் பெங்களூர் நகரத்தை மட்டுமே சார்ந்து இருப்பதால் மொத்த அளவீட்டை 30 சதவீதம் வரையில் உயர்த்த கர்நாடக டிஜிட்டல் எக்னாமி மிஷன் பெரிய அளவில் உதவும் என இம்மாநில அரசு நம்பப்படுகிறது.
பிபிபி மாடல்
மேலும் கர்நாடக டிஜிட்டல் எக்னாமி மிஷன் ஒரு பிபிபி மாடலில் தான் இயங்க உள்ளது அதாவது public-private partnership model. இதன் மூலம் அரசு 49 சதவீதமும், தொழிற்துறை நிறுவனங்கள் 51 சதவீதம் என்ற அளவீட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.