உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்ற நாடுகளுக்கு மறைமுகமாக கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி குவித்தது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில் அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர், 'நாங்கள் எந்த நாட்டில் இருந்தும் கச்சா எண்ணெயை வாங்குவோம் என பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர்
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது என்பதும் இந்த போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா உள்பட உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பொருளாதார தடை விதித்தது என்பதும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சலுகை விலையில் கச்சா எண்ணெய்
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தி விட்டது. ஆனால் அதே நேரத்தில் தனது நட்பு நாடுகளுக்கு 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன் வந்தது. இதனை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட இந்தியா, வழக்கத்தை விட 50 மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கியது. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் கடந்த 140 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கையை பொருட்படுத்தாத இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என மறைமுகமாக இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இந்தியா அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை மேலும் அதிகமாக வாங்கி குவித்தது.
பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
இந்த நிலையில் அமெரிக்க பயணம் சென்ற மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க கூடாது என எந்த நாடும் எங்களுக்கு நிபந்தனை விதிக்கவில்லை என்றும் அப்படியே நிபந்தனை விதித்தாலும் இந்திய மக்களுக்கு பெட்ரோல் டீசலை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதால் நாங்கள் எந்த நாட்டிலும் கச்சா எண்ணெயை வாங்குவோம் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.