டெல்லி: இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் துறை சார்ந்த பன்முகம் கொண்ட நிறுவனமான கெயில் நிறுவனம், அரசு பொதுத்துறையை சேர்ந்த ஒரு மிகப் பெரிய நிறுவனமாகும்.
இந்த நிலையில் தனது இயற்கை எரிவாயு பைப்லைன் வர்த்தகத்தை தனி நிறுவனமாக பிரிப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக எண்ணெய் அமைச்சகம் அனுமதி கோரியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
தனித்தனியாக பிரிக்க திட்டம்
இதில் வேடிக்கை என்னவெனில் இவ்வாறு தனியாக ஒரு நிறுவனமாக பிரித்தால் தான், அதன் மூலம் முதலீடுகளை பெற முடியும் என்றும் கருதப்படுகிறது. அல்லது வாய்ப்பிருந்தால் பங்குகளை விற்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஏற்கனவே 5 மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பட்ஜெட்டில் எல்ஐசி பங்கு விற்பனை குறித்து பேசப்பட்டது.
தனியார்மயமாக்க திட்டமா?
இந்த நிலையில் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனத்தின் ஒரு பகுதி வர்த்தகத்தை பிரித்து அதை விற்பனை செய்வதை பற்றிய செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. உண்மையில் இது வர்த்தகத்தை மேம்படுத்த இப்படி ஒரு திட்டமா? அல்லது பங்கு விற்பனைக்காக இப்படி ஒரு திட்டமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை .
அடிக்கடி புகார்
கெயில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனமாகும். இது நாட்டில் 16,981 கிமீ பைப்லைன் வர்த்தகத்தில் 70% அதிகமான உரிமைகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் இயற்கை எரிவாயு பயன்படுத்துபவர்கள் தங்கள் எரிபொருளை கொண்டு செல்வதற்காக கெயிலின் 12,160 கிமீ பைப் லைன் நெட்வொர்க்கை நியாயமாக அணுகவில்லை என்றும் அடிக்கடி புகார் எழுவதாகவும் கூறப்படுகிறது.
பிளவுக்கு காரணம் என்ன?
ஆக ஒரே நிறுவனத்தில் எழும் இந்த புகார்களுக்கு மத்தியில், உட்கட்சி பூசலை தவிர்க்கவே இப்படி ஒரு பிரிவினை என்றும், இதனால் தான் கெயிலை பிரிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிளவுபடுத்தலுக்கு பிறகு கெயிலின் முக்கிய வணிகம் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை விற்பனை செய்வதாகும்.
அமைச்சரவை விரைவில் பரிசீலனை
இது குறித்து அமைச்சரை விரைவில் பரிசீலிக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன. அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு குழாய் வணிக்கத்தை ஒரு தனி துணை நிறுவனமாக மாற்ற ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார். ஆக இது நிறைவேற 8 -10 மாதங்கள் ஆகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இது தனி துணை நிறுவனமாக மாற்றப்பட்ட பின், முதலீட்டாளார்களுக்கு விற்கப்படலாம் என்று இதை அறிந்த வட்டாரங்கள் கூறுவதாக செய்திகள் கூறுகின்றன.
இப்போதைக்கு இது சாத்தியமில்லை
மேலும் இந்த விற்பனையானது 2022க்கு முன்னர் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் சிந்தனை என்னவெனில் எரிவாயு சந்தை முதிர்ச்சியடையாது. அதோடு இதை நிறைவேற்ற மாநில ஆதரவும் தேவைப்படும் என்றும் இதனால் கெயில் பிரிப்பது பற்றி யோசித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரிக்க திட்டம்
முன்னதாக இந்திய பொதுத் துறை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான கெயிலின் (GAIL) வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் இந்நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது குறிபிடத்தக்கது.
பிரிப்பது மிக எளிது
மேலும் எரிவாயுக் குழாய்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் இரண்டுக்கும் தனித்தனிக் கணக்குகளைத்தான் கெயில் நிறுவனம் கையாண்டு வருகிறது. எனவே இவற்றை இரண்டாகப் பிரிப்பது எளிதானது தான். இதன் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு எரிவாயுக் குழாய்கள் பிரிவு தனியாகவும், சந்தைப்படுத்துதல் பிரிவு தனியாகவும் இயங்கும் என்று கூறப்பட்டது.
அதிகரிக்க திட்டம்
இதன் மூலம் 2030 ஆம் ஆண்டில் எரிவாயு பயன்பாட்டை 15% ஆக உயர்த்த முடியும் என்றும் அரசாங்கம் நம்புவதாகவும், இது தற்போது 6.2% ஆக தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியிலேயே முதன் முதலில் இது குறித்தான பேச்சு தொடங்கிய போது, எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான், கெயில் குழாய் பதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சந்தைபடுத்தும் வணிகத்தை கைவிட வேண்டும் பரிந்துரைத்தது கவனிக்கதக்கது. இந்த நிலையில் அரசுக்கு கெயில் நிறுவனத்தில் 54.89% பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.