உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா முதல் பெட்ரோல் கூட வாங்க முடியாமல் தவிக்கும் இலங்கை வரையில் அனைத்து நாடுகளையும் வாட்டி வதைக்கும் பணவீக்கம், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானையும் விட்டு வைக்கவில்லை.
ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், நாணய மதிப்பு, ஆகியவை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் நிலக்கரி, எரிபொருள் இல்லாமல் பல மின்சார உற்பத்தி ஆலைகளை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
நேற்று வெளியான அறிவிப்பில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேலை நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் நாட்டில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) பணவீக்க அளவுகளின் கணிப்புகளைக் கணித்து சந்தை மற்றும் அன்னிய செலாவணி ஸ்திரத்தன்மை அபாயங்களைக் கட்டுப்படுத்த தனது நாணய கொள்கையில் பெஞ்ச்மார்க் விகிதத்தை 150 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 13.75 சதவீதமாக அறிவித்துள்ளது.
நாணய கொள்கைக் குழு கூட்டம்
பாகிஸ்தான் நாணய கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவில், சந்தையில் மிதமான டிமாண்ட்-ஐ உருவாக்கவும், மேலும் நிலையான வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கவே 12.25 சதவீதமாக பென்ச்மார்க் வட்டி விகிதம் 13.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான்
இதற்கு முன்பு ஏப்ரல் மாதம், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் தனது பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தில் பெஞ்ச்மார்க் வட்டியை 250 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் அதிகரித்தது. ஆனாலும் பாகிஸ்தான் நிலைமை மேம்படவில்லை, இதனால் மீண்டும் வட்டியை உயர்த்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியாவில் மே மாதம் ஆர்பிஐ ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக உயர்த்தியது.
ஜூன் நாணய கொள்கை கூட்டம்
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூன் நாணய கொள்கை கூட்டத்தில் உறுதியாகச் சொல்லாவிட்டாலும் தோராயமாக 5.15 சதவீதம் வரையில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படலாம் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் - சீனா
தற்போது இந்தியாவின் பெஞ்ச்மார்க் விகிதமான 4.4 சதவீதத்தை ஒப்பிடுகையில் பாகிஸ்தான் நாட்டின் 13.75 சதவீத வட்டி விகிதம் என்பது 3 மடங்கிற்கு அதிகமாகும். இதேபோல் சீனா தனது 5 வருட கடன் திட்டத்திற்கான (LPR - loan prime rate ) வட்டியை 4.6 சதவீதத்திலிருந்து 4.45% ஆக குறைத்தது. சீன வங்கிகள் LPRஐ பென்ச்மார்க் வட்டி விகிதமாகக் கடைப்பிடிக்கிறது