உலக நாடுகளில் தற்போது குறைந்த காலகட்டத்தில் அதிக லாபம் பெற வேண்டும் என்றால் அனைவருக்கும் தெரிந்த முக்கியமான முதலீட்டு வழிகளில் ஒன்று கிரிப்டோகரன்சி.
புத்தாண்டு துவங்கியதில் இருந்து தொடர்ந்து பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சிகளும் சரிந்து வரும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அதிகப்படியான தொகை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டு மக்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 5 கோடி அமெரிக்க டாலர் அளவிலான தொகையைக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். இந்த 5 கோடி டாலர் முதலீட்டை சுமார் 1064 பேர் 2923 பரிவர்த்தனைகளில் தனியார் வங்கி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் தளங்கள் வாயிலாக முதலீட்டு செய்யப்பட்டு உள்ளது என ANI தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி முதலீடு
பாகிஸ்தான் நாட்டில் கிரிப்டோகரன்சி முதலீடு குறித்து எந்தொரு ஒழுங்குமுறை கட்டமைப்பும் இல்லாததால், அந்நாட்டின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி கிரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் நிதியளிப்பவர்களை கண்டுபிடித்து சுமார் 1,054 கணக்குகளை முடக்கியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃ பாகிஸ்தான்
ஏப்ரல் 2018-இல் ஸ்டேட் பாங்க் ஆஃ பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையின் படி அந்நாட்டில் கிரிப்டோகரன்சிகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி முதலீடு
இந்தத் தடை இன்றளவும் இருக்கும் வேளையிலும் பாகிஸ்தானில் பலர் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனர் என்று பாகிஸ்தான் நாட்டுப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
FPCCI அமைப்பு
இதற்கிடையில், பாகிஸ்தானில் கிரிப்டோ முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும் ஏராளமான பாகிஸ்தான் மக்கள் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதை அடிப்படையாக வைத்து, நாட்டின் கொள்கை ஆலோசனைக் குழுவான பாகிஸ்தான் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் & இன்டஸ்ட்ரி (FPCCI) கிரிப்டோ கரன்சிகள் மூலம் பல பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என்று கூறியுள்ளது.
20 பில்லியன் டாலராக
மேலும் கிரிப்டோகரன்சியை அடிப்படையாக வைத்து அந்நாட்டில் நாணய இருப்பை அதிகரிக்க முடியும் எனவும் கூறியுள்ளது FPCCI அமைப்பு. 2020-21ல் பாகிஸ்தான் நாட்டில் கிரிப்டோ முதலீடுகளின் அளவு 711 சதவீதம் அதிகரித்து 20 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.