இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில் 2025-26 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை இந்தியா எட்டும் என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்
அவரது இந்த பேச்சு இந்திய எலக்ட்ரானிக் சந்தையில் ஒரு புதிய புரட்சி ஏற்பட போகிறது என்பதை உறுதி செய்துள்ளது.
எலக்ட்ரானிக் உற்பத்தியில் இந்தியா
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டரில் இந்தியாவின் முதல் லித்தியம் செல் உற்பத்தி நிலையமான முனோத் இண்டஸ்ட்ரீஸை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ' 2025-26 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கை இந்தியா அடைய முடியும்' என்று தெரிவித்தார்.
புண்ணிய பூமி
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சர் சந்திரசேகர் இதுகுறித்து மேலும் கூறுகையில், "இந்த புண்ணிய பூமியான திருப்பதியில் இருப்பதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். குறிப்பாக திருப்பதி இஎம்சி மற்றும் இந்தியாவின் முதல் லித்தியம் செல் உற்பத்தி ஆலையில் இருப்பது தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
300 பில்லியன் டாலர்
2025-26 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கை எட்டுவதே எங்கள் இலக்கு என்றும், இது 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபோது இருந்ததை விட 24 மடங்கு அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப்
இந்த கனவை நனவாக்க, ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கும், ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் அரசு துணையாக நிற்கும் என்றும், நாம் அனைவரும் இணைந்து இந்த இலக்கை அடைய பயணம் செய்வோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
லித்தியம்-அயன் தொழிற்சாலை
லித்தியம்-அயன் தொழிற்சாலையின் வணிகரீதியான உற்பத்தி மற்றும் முறையான விற்பனை அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது ஆலையின் நிறுவப்பட்ட திறன் 270 மெகாவாட் மற்றும் தினசரி 10Ah திறன் கொண்ட 20,000 செல்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
பிரதமர் மோடியின் கனவு
இந்தியாவை மின்னணு உற்பத்தியின் உலகளாவிய மையமாக மாற்றும் பிரதமர் மோடியின் கனவை நனவாக்குவதற்கான திசையின் ஒரு படியாக மின்னணு உற்பத்தி கிளஸ்டர்கள் இருப்பதாக அமைச்சர் பாராட்டினார். மேலும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மையங்களாக வேகமாக மாறி வருகின்றன என்றும், அவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய பங்கை வகிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
சென்னை நிறுவனம்
சென்னையை சேர்ந்த முனோத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.165 கோடி செலவில் திருப்பதியில் இந்த அதிநவீன நிறுவனத்தை அமைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் இந்நகரத்தில் அமைக்கப்பட்ட இரண்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்களில் ஒன்றாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.