பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா ரஷ்யாவின் நட்பானது தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. தொடர்ந்து நட்புறவினையும் தாண்டி வணிக உறவும் மேம்பட்டு வருகின்றது.
ரஷ்யாவினை முடக்க பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு தடைகளை விதித்து வரும் நிலையில், மறுபுறம் வழக்கத்தினை விட சுறுசுறுப்பாக ரஷ்யா இயங்க தொடங்கியுள்ளது.
இந்தியா, சீனா என பல நாடுகளுடனான வணிக உறவினை மேம்படுத்தி வருகின்றது.
வணிக வளர்ச்சி
குறிப்பாக இந்தியாவுடன் பல்வேறு வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது, ஏற்கனவே கச்சா எண்ணெய் வணிகம், நிலக்கரி போக, சில்லறை வணிகத்தினையும் மேம்படுத்த ஏற்கனவே பல கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் பல நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன.
பிரிக்ஸ் நாடுகளில் வளர்ச்சி
இதற்கிடையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவும், பிரிக்ஸ் நாடுகளின் வணிக சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு சீனாவில் சீன கார்கள், உபகரணங்கள், இந்தியாவுடனான சில்லறை வணிகங்கள் என பல கட்டமாக பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன. பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யாவின் இருப்பும் விரிவடைந்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தீவிரம்
எனினும் எந்தெந்த நிறுவனங்கள் வருகின்றன என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த மாதம் ரஷ்யா இந்தியாவின் இரண்டாவது பெரிய இறக்குமதி நாடாக உள்ளது. இது சவுதி அரேபியாவினையும் விஞ்சியுள்ளது. புதினின் அறிக்கை படி பார்த்தால், இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுடன் தொடர்ந்து தனது வணிக நடவடிக்கையில் தீவிர கவனமாக இறங்கியுள்ளதை அறிய முடிகிறது.
எண்ணெய், உர ஏற்றுமதி
இந்தியாவினை தொடர்ந்து சீனாவும் அதிகளவிலான எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தரப்பில் இருந்து எண்ணெய், நிலக்கரிக்கு அடுத்ததாக உரங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு உர ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றது.
ஐடி நிறுவனங்கள் விரிவாக்கம்
மேலும் இந்தியாவில் ரஷ்ய ஐடி நிறுவனங்கள் தங்களது இருப்பினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து விரிவாக்கம் செய்ய தொடங்கியுள்ளன. தனது வணிக நடவடிக்கையினை மேம்படுத்த தொடங்கியுள்ளதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
தங்கம் ஏற்றுமதி
சுவிஸ் ஃபெடரல் தரவுகளின் படி மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து 3 டன்களுக்கும் அதிகமான தங்கம் சுவிட்சர்லாந்திற்கு அனுப்பப்பட்டது. இது பிப்ரவரிக்கு பிறகு தொடங்கப்பட்ட முதல் ஏற்றுமதி என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் ரஷ்யாவினை முடக்க நினைக்கும் நாடுகளுக்கு, ரஷ்யாவின் மறைமுக பதிலாக இது இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.