இந்திய விமான பயணிகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை சற்றுமுன் அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அதிக விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்பட உள்ளதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா - சிங்கப்பூர் இடையிலான விமான போக்குவரத்து குறைந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளதால் இந்திய விமான பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இந்தியாவிற்கு அதிக விமானங்களை இயக்க இருக்கிறோம். இந்திய விமான சந்தை மிகவும் வலுவாக உள்ளது. விரைவில் வெளியிட உள்ள அட்டவணைகளில் இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும். அக்டோபர் மாதம் குளிர் கால அட்டவணையாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கு அடுத்த ஆண்டு அட்டவணையாக இருந்தாலும் சரி, இந்தியாவுக்கு சிங்கப்பூரிலிருந்து அதிக விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியா-சிங்கப்பூர்
தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து வாரத்திற்கு 73 விமானங்களை இயக்கி வருகிறது. அதேபோல் அமிர்தசரஸ், கோவை, ஐதராபாத், திருவனந்தபுரம், திருச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 6 நகரங்களில் இருந்து 38 விமானங்களை இயக்கி வருகிறது.
100% விமான சேவை
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் 75% விமானங்களே இயக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் 100% இயக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கொரோனா
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவையும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை சீரானதை அடுத்து மீண்டும் முழு அளவில் இயக்க முடிவு செய்திருப்பதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.
ஏர்பஸ் ஏ380
மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஏர்பஸ் ஏ380 விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும், அதேபோல் புதிய போயிங் 737-8 தயாரிப்பு விமானங்களை ஹைதராபாத், கொச்சி மற்றும் கொல்கத்தாவில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இயக்க இருப்பதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.