மொபைல் போன் என்பது தற்போது உலகில் உள்ள அனைவருக்குமே இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நல்ல மொபைல் போன் கையில் இருந்தால் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர், டிவி, வானொலி உள்பட பல பொருட்களும் கையில் இருப்பதற்கு சமம்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு பில்லியன் மக்கள் மொபைல் போன் பயன்படுத்துவார்கள் என்ற கணிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் மார்க்கெட் மிக வேகமாக உயர்ந்து வருகிறது என்பதும், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போன் முதல் அதிக விலையில் உள்ள ஸ்மார்ட்போன் வரை இந்தியாவில் ஏராளமாக விற்பனையாகி வருகிறது என்பதும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2010ல் ஸ்மார்ட்போன் பயனாளிகள்
கடந்த 2010ஆம் ஆண்டு 200 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2025ஆம் ஆண்டில் அது 1,200 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சாம்சங் - சியோமி
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை இந்தியர்கள் 26% பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் சாம்சங் ஸ்மார்ட்போன்களை 20% பேரும், விவோ ஸ்மார்ட்போன்களை 15% பேரும், ரியல்மி ஸ்மார்ட்போன்களை 11% பேரும், ஒப்போ ஸ்மார்ட்போன்களை 10% பேரும் பயன்படுத்தியுள்ளனர். 18% பேர் மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் விலை
அதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு 48% பேர் ரூ.10,000 முதல் ரூ.20,000 விலை மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் 35% பேர் ரூ.10,000க்குள் உள்ள ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியுள்ளனர். 10% பேர் ரூ.20,000க்கும் மேல் உள்ள ஸ்மார்ட்போன்களையும், 4% பேர் ரு.45,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களையும், 3% பேர் ரூ.45,000க்கும் மேல் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இண்டர்நெட் டேட்டா
இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு வெறும் 0.8% பேர் மட்டுமே மொபைலில் இண்டர்நெட் பயன்படுத்திய நிலையில் அது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 2021ஆம் ஆண்டு 17% பேர் மொபைலில் இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.