உக்ரைன் நாட்டிற்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தடை மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா தடை விதித்துள்ளன என்பது தெரிந்ததே.
ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் இந்தியா மற்றும் சீனா உள்பட ஒருசில நாடுகள் ஏராளமான கச்சா எண்ணெயை வாங்கி குவித்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக தனது இரண்டு அமைச்சர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளது.
இலங்கைக்கு கச்சா எண்ணெய்
இந்தியா, சீனாவை அடுத்து ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்க இலங்கை திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக இரண்டு இலங்கை அமைச்சர்கள் ரஷ்யாவிற்கு சென்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
கடனுக்கு கச்சா எண்ணெய்
ஆனால் அதே நேரத்தில் இலங்கை பொருளாதாரம் தற்போது கச்சா எண்ணெய்யை ரொக்கம் கொடுத்து வாங்கும் நிலையில் இல்லை என்பதால் கடனுக்கு கச்சா எண்ணெய் வேண்டும் என ரஷ்ய அரசிடம் கேட்டுக் கொண்டதாகவும் அதே சமயத்தில் மலிவு விலையில், இலங்கை ரூபாயில், கடனுக்கு கச்சா எண்ணெய் வாங்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா தயக்கம்
இந்த கோரிக்கைக்கு ரஷ்யா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. தற்போது இலங்கை நாணயம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இலங்கை நாணயத்தில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா தயக்கம் காட்டி வருகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கை நிலவரம்
இலங்கையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் விலை அதிகரித்துள்ளது என்பதும், பெட்ரோல் டீசலுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசலுக்கு டோக்கன் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது அந்நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை உணர்த்துகிறது.
இந்தியா உதவி
இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கைக்கு கச்சா எண்ணெயை ஓரளவு இந்தியா வழங்கி வந்தாலும் அது போதுமானதாக இல்லை. எனவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இலங்கை அரசு முயற்சித்து வருகிறது.
கைவிட்ட சவுதி அரேபியா
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு கடனுக்கு கச்சா எண்ணையை வழங்க மறுத்துவிட்டதால், ரஷ்யா தங்களுக்கு கடனுக்கு கச்சா எண்ணெயை தரும் என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளது. இதுகுறித்து இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியபோது ரஷ்ய அரசிடமிருந்து அல்லது ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிந்தால் எங்களுக்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்றும், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும், ரஷ்ய அரசு அல்லது ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் எங்களுக்கு மலிவு விலையில் குறுகியகால கடனுக்கு கச்சா எண்ணையை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.
ரஷ்யா ஒப்புக்கொள்ளுமா?
இதற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளுமா? இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை கடனுக்கு கொடுத்து ஆதரவு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.