வெள்ளிக்கிழமை அமெரிக்கக் கருவூலத் துறை வெளியிட்ட அறிவிப்பில் நாணய நடைமுறைகள் மற்றும் மேக்ரோ பொருளாதாரக் கொள்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நாணய கண்காணிப்பு பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இப்பட்டியலில் இருந்த இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் நாணயங்களும் நீக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய ரூபாய் இடம்பெற்று இருந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்கக் கருவூலச் செயலர் ஜேனட் யெலன் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்திய நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கக் கருவூலத் துறை
தற்போது நாணய கண்காணிப்புப் பட்டியலில் சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய ஏழு பொருளாதார நாடுகள் உள்ளது என்று அமெரிக்கக் கருவூலத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய 2 ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்று நிபந்தனைகள்
தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடுகள் தொடர்ச்சியாக இரண்டு அறிக்கைகளில் மூன்று நிபந்தனைகளில் ஒன்றை மட்டுமே பூர்த்திச் செய்துள்ளது. அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜேனட் யெலனின் முதல் இந்திய பயணம் என்பதால் ஆரம்பம் முதலே அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தியா-அமெரிக்கா பொருளாதார உறவு
இந்தியா-அமெரிக்கா பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜேனட் யெலனின் இந்திய பயணத்தில் வெள்ளிக்கிழமை நொய்டாவில் உள்ள மைக்ரோசாப்ட் இந்தியா டெவலப்மென்ட் சென்டரில் யெலன் நாட்டின் முக்கியமான வணிகத் தலைவர்களைச் சந்தித்தார்.
ஜேனட் யெலன்
அமெரிக்கக் கருவூல செயலாளர் ஜேனட் யெலன், சர்வதேச வர்த்தகத்திற்குப் புதிய பார்வை முன்வைத்துள்ளார், சீனா போன்ற 'ஆபத்தான நாடுகளில்' உலகம் சார்ந்திருப்பதைக் குறைக்க 'ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள்' ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அன்னிய செலாவணி தரவுகள்
இந்த நிலையில் சீனா தனது அன்னிய செலாவணி தரவுகளை வெளியிட மறுத்துவிட்ட நிலையில், வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கும் காரணத்தால் அமெரிக்கக் கருவூல அமைப்பு சீன நாணயத்தைத் தனது நாணய கண்காணிப்புப் பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து
மேலும் இந்த அறிக்கையில் முக்கியமாகக் கவனிக்கும் விஷயமாகச் சுவிட்சர்லாந்து மீண்டும் மூன்று அளவுகோல்களின் வரம்புகளை மீறிய காரணத்தால் இதை Currency Manipulator என்று அறிவித்துள்ளது. ஆனால் அறிக்கையில் சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயத்தை ஆய்வு செய்யப் போதுமான தரவுகள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
வெளிப்படை தன்மை
ஒவ்வொரு நாடும் தனது நாணய பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி அளவீட்டில் வெளிப்படைத் தன்மை உடன் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.