இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருந்த வோடபோன் ஐடியா, தற்போதும் கடும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகின்றது.
தொடர்ந்து பல காலாண்டுகளாக வெறும் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனம் நிதி திரட்ட பல்வேறு வகையிலும் முயன்று வருகின்றது.
அந்த வகையில் தற்போது எமிரேட்ஸை சேர்ந்த டெலிகம்யூனிகேஷன் குழுமத்தினை சேர்ந்த e& (ETISALAT.AD) நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 9.8 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
வோடபோனில் முதலீடா?
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வோடபோன் நிறுவனம் 2766 மில்லியன் பங்குகளை விற்பனை செய்யதுள்ளதாகவும், இதன் மதிப்பு 4.4 பில்லியன் டாலர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வோடபோன் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் மேம்பாடு அடையும்
இது குறித்து e& குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹடெம் டோவிடார் கூறுகையில், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப வணிகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று வோடபோன். அதனுடன் இணைந்து செயல்படுவது, இரு தரப்பு வணிகத்தினையும் மேம்படுத்த உதவும். இது வேகமாக வளர்ந்து வரும் தொலைத் தொடர்பு சந்தையில், மேற்கொண்டு எங்களை ஆதரிக்க உதவும் என தெரிவித்துள்ளார்.
கவர்ச்சிகரமான வாய்ப்பு
இது குறித்து அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்சிலும் தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில் வோடபோன் ஒரு முன்னணி டிஜிட்டல் ஆப்ரேட்டர். உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனம். e& உடனான ஒப்பந்தம் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
எதுவும் வேண்டாம்
e& வோடபோனில் நீண்டகால பங்குதாரராக இருக்க திட்டமிட்டுள்ளது. எனினும் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளையோ அல்லது எந்த கட்டுப்பாட்டினையும் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இதன் மூலம் வோடபோனில் எந்தவிதமான தாக்கத்தினையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக வோடபோனில் e& நீண்டகால மற்றும் ஆதரவான பங்குதாரராக இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நிர்வாக குழுவில் இடம் வேண்டாம்
அதோடு நிறுவனத்தின் வாரியம் அல்லது நிர்வாக குழுவைக் கட்டுப்படுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ விரும்பவில்லை. அதேபோல் வோடபோனுக்கான சலுகையும் வழங்கும் எண்ணமும் இல்லை என்றும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.